(ஆதவன்)
வவுனியா, தோணிக்கலில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்திருந்தனர். இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பணிமனையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தார். தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காட்டியிருந்தார்.
இதன் பின்னர் பிரதான சந்தேகநபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்றபோது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் அங்கு சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கிராம அலுவலர் சம்பவத்தின்போது உயிரிழந்த சுகந்தனுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும். அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேகநபருமாகிய தடுப்பில் உள்ள நபர் கிராம அலுவலரைக் காதலித்து அழைத்துச் சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்குக் காரணம் என சாட்சியமளித்திருந்ததாகத் தெரிவித்தார்.
மன்றால் இவ் வழக்கு தவணைக்காக அடுத்த மாதம் 7 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. இதேவேளை -இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.