இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைவது மீண்டும் இந்திய மத்திய அரசால் தாமதிக்கப்பட்டிருக்கின்றது.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாந்தன், தன் விடுதலையை அனுபவிக்காமல் -தன் உறவுகளைச் சந்திக்காமல் இவ்வுலகை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் - ஏனைய மூவரும் விடுதலை ஏக்கத்துடன் இன்னமும் இந்திய சிறப்புத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கான கடவுச்சீட்டு வழங்கும் செயன்முறைகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் பின்னடிப்பால் இழுபறி நிலையில் இருக்கின்றன. முருகன், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் 1990ஆம் ஆண்டு தமிழகத்துச் சென்று அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்கள். ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸின் மைத்துனர். திருச்சியில் உள்ள சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இந்திய அரசாங்கத்தின் பயண ஆவணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பெரும் சட்டப் போராட்டத்தின் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இவர்களை - மீண்டும் சிறப்பு முகாமில் பொலிஸ் கண்காணிப்பில் தங்க வைத்து பெரும் மனித உரிமை மீறலைச்செய்து வருகின்றது அகிம்சையின் மறுபெயர் தாமே எனத் தம்பட்டம் அடிக்கும் காந்திய தேசம்.
திருச்சி சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், பல்வேறு காரணங்களைக் காட்டி இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் அவருக்கான பயண ஆவணங்களை வழங்குவதை இழுத்தடித்து வந்தன. சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன், சரியான மருத்துவக் கவனிப்பின்றி, வீடு திரும்பும் தனது ஆசை நிறை வேறாமலேயே உயிர் பிரிந்தார். இதை இந்திய, இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட பழி வாங்கல் என்றே நோக்கும் தமிழ் மக்கள் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரை உடன் விடுவிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.
கடந்த காலங்களில் -பல்வேறு சந்தர்ப்பங்களில் -தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிதறடித்த -தமிழ் மக்களைக் கைவிட்ட இந்தியா இந்த விடயத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. காலங்காலமாகத் தம்மை ஏமாற்றும் இலங்கையிடம் பணிந்து கிடக்கும் இந்தியா என்னும் பிராந்திய வல்லரசு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து - வாழ்வின் பெரும்பங்கை சிறைக்கம்பிகளுக்குள் தொலைத்து விட்டவர்கள் மீது இன்னமும் வன்மம் கொண்டு தண்டிக்க முயல்கின்றது. காந்திய தேசத்தின் இந்தப்போக்கே தமிழ் மக்கள் இந்தியாவை விட்டுத் தூரம் செல்ல வைக்கின்றது. இந்த எண்ணம் -போக்கு தொடருமானால் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமான விரிசல் அகலிப்பதைத் தடுக்கமுடியாது.
(15.03.2024 - உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.