இலங்கையில் மனித கடத்தல் தொடர்பிலான பல வழக்குகளின் சந்தேக நபரான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் பெங்களூர் பிரிவினரால் நேற்று தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 வயதான முகமது இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் 2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கையைவிட்டு தப்பிச்சென்று தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் இவர் தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.
சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட விடயங்களில் இவர் ஈடுபட்டுள்ளதோடு இராமநாதபுரத்திலும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை பிரஜைகள் குழுவொன்று இந்தியா வந்து, உரிய ஆவணங்களின்றி கர்நாடகாவின் மங்களூரில் வசித்து வருவதை பொலிஸார் கண்டறிந்த பின்னரே இவர்களது பின்புலத்தில் உள்ளவர்கள் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்ததன் விளைவாக 38 இலங்கை பிரஜைகளை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள மனித கடத்தல்காரர் ஹாஜா நஜர்பீடனிடம் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.