ஆதவன்.
இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதிசெய்யும். ஆனால், காஸாவுக்கு எதிராக ஆயுதங்களை வழங்கும் நாடுகள் எமக்கு மனித உரிமைகள் தொடர்பில் கற்பிக்கத் தேவையில்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கின்றார் வெளிவிவகார அமைச்சரான அலி சப்ரி . உரிமைகளுக்காக அமைதியாகப் போராடுவதில் தவறில்லை என்றும் அவர் தன் உரையில் கோடி காட்டியிருக்கின்றார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி. ஆதலால், விவாதப் புள்ளிகளும், தர்க்கங்களும் அவருக்குப் புதிதல்ல. ஆனால், அவர் புத்திசாலியாக இருக்கின்றார் என்பதற்காக ஏனையோர் முட்டாள்கள் என்றும் பொருளல்ல.
வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில், காஸா நிலைவரம் தொடர்பான தெளிதல் அலி சப்ரிக்கு இருக்கவே செய்யும். காஸாவுக்கு எதிராக ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் செயல் கலப்பற்ற கபடத்தனம்தான். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால், இன்று இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மனோநிலையைக் கண்டிக்காத நாடுகள் என்று ஒன்றுமேயில்லை. இஸ்ரேலை தன் முதலாவது செல் லப்பிள்ளையாகக் கொண்டிருக்கும் அமெரிக்கா கூட விரும்பியோ விரும்பாமலோ காஸாவில், இஸ்ரேல் புரியும் அத்துமீறல்களைக் கண்டித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் போர்க்குற்றம் என்று சொல்லியிருக்கிறார் ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச்செய லர் அன்ரனியோ குட்டரஸ். குட்டரஸின் இந்தக் கருத்துக்காக அவர் பதவி விலகவேண்டும் என்று இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாகப் போர்க்கொடி தூக்கியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில், காஸாவுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு தாக்குதல் நடத்துவதைப் போன்றும் - உலகத்தின் நீதித்தராசுகள் இந்த விடயத்தில் தாழ்ந்தே இருப்பது போன்றதுமான தோற்றப்பாட்டை அலி சப்ரி உருவாக்க எத்தனிப்பது பெரும் அபத்தம். இஸ்ரேல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் செயலர் அன்ரனியோ குட்டரஸ் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் சரியானவை என்றால், அவரை ஒருநீதிமானாகக் கொண்டு - இலங்கை தொடர்பிலும் குட்டரஸ் வெளிப்படுத்திய கருத்துகளை, 'உள்ளது உள்ளபடியாக' ஏற்றுக்கொள்ள, செயற்படுத்த அலி சப்ரி தயாரா? என்ற கேள்வி எழுவது இங்கே தவிர்க்க முடியாததாகின்றது. வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் இந்தக் கேள்விக்குப் பதில் வழங்கவேண்டிய பாத்திரவாளியும் அலி சப்ரியே.
தமிழர்கள் தம் உரிமைக்காக அமைதியாகப் போராடவேண்டும் என்ற தொனிப்படக் கருத்துப் பகிர்ந்துள்ள இதே அலி சப்ரிதான், கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கம், கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் ஜனஸாக்களை, முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு எதிராக எரியூட்டியபோது கிளர்ந் தெழுந்தார். 'முஸ்லிம் இளைஞர்களின் பொறுமையைச் சோதித்து அவர்களை அடிப்படைவாதக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் தள்ளக்கூடிய செயல்’ என்று அவர் ஜனஸா எரிப்புக்கு தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இத்தனைக்கும் அதே கோத் தாபய அரசாங்கத்தில் அவர் நீதி அமைச்சராக இருந்தார். ஜனஸாவை எரித்தமை தவறுதான். முஸ் லிம்களுக்காக பல்லாயிரம் தமிழர்கள் அன்று களத்தில் குதித்தனர். ஆனால், இங்கே அலி சப்ரி சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில், ஜனஸாக்களை எரிக்கும் செயல் முஸ்லிம் இளைஞர்களின் பொறுமையைச் சோதித்து அவர்களை ஆயுதம் ஏந்தவோ அல் லது அடிப்படைவாதக் கொள்கைக்குள் கொண்டு செல்லவோ வைக்குமென்றால், இத்தனை அடக்கு முறைகளையும் எதிர்கொண்ட - எதிர்கொள்ளும் தமிழர்களின் மனோநிலை என்னவாக இருக்கும்? இந்தக் குறைந்தபட்சப் புரிதலுக்கும் கொழும்பின் அதிகாரக் கதிரைகளுக்கும்தான் கிஞ்சித்தும் தொடர்பில்லையே. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.