(பட்சி)
"நாங்கள் செய்யிற எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார். அதுக்கேத்தபடி கணக்கு வழக்குப் போட்டு தண்டனை தருவார்" எண்டு சின்னப்பிள்ளையளை பெரியாக்கள் வெருட்டி வைக்கிறவை. இப்பவெல்லாம் எங்களைப் பார்க்க கடவுளுக்கே நேரமில்லை. கடவுள்மாரே தங்கட கோயில், குளங்களைப் பார்க்க 'சிசிரிவி கமெராவைப் பூட்டிப்போட்டுதங்கடபாட்டில கண்ணைமூடிக்கொண்டு இருக்கினம். அதால கடவுள்மார் கண்காணிக்க வேண்டிய வேலையை எல்லாம் அரசாங்கமும். அவையின்ர உளவாளிமாரும் செய்துகொண்டிருக்கினம். வாள்வெட்டு, கொலை, கொள்ளை, கடத்தல், போதை இப்பிடியான விசயங்களை கண்காணிக்கிறதில இலங்கை அரசாங்கத்துக்கும், அவையின்ர உளவாளிமாருக்கும் பெரிசா விருப்பமில்லை. அப்பிடியான குற்றங்களைச் செய்யிறவையும். இவையும் ஒண்டுக்க ஒண்டுதானே. அதால உந்த நினைவேந்தல்கள். ஆர்ப்பாட்டங்களை வைக்கிறவையை மட்டும் தான் கண்கொத்திப் பாம்பு மாதிரி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கினம்.
கிட்டடியில தன்வந்த் எண்ட தமிழ்ப்பெடியன் பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவனெல்லோ. அந்தப் பெடியன் இந்தியாவின்ர தனுஷ்கோடியில இருந்து, தலைமன்னார் வரைக்கும் நீந்திக்கொண்டு வரேக்க, பக்கத்தில கொஞ்சப்பேர் 'சப்போர்ட் பண்ணிக் கொண்டு வரவேணும். அப்பிடிச் சப்போர்ட்டா இன்னொரு படகில வாறதுக்கு. யாழ்ப்பாணம் முனிசிப்பலின்ர முந்தின மேயர் மணிவண்ணனையும். அவரின்ர அணியில இருக்கிற பார்த்தீபனையும் கேட்டிருக்கினம். அவையும் ஓமெண்டு சொல்லிப் போட்டு, அதுக்கு பாதுகாப்பு அமைச்சின்ர அனுமதிக்கு விண்ணப்பிச்சிருக்கினம். ஆனால் பாதுகாப்பு அமைச்சு அவைக்கு 'எம்.ஓ.டி' (அனுமதி) குருக்கேலாது எண்டு மறுமொழி போட்டிருக்குது. அந்த மறுமொழி யில என்னத்துக்காக அனுமதியை மறுத்தவை எண்டதுக்குக் காரணமும் சொல்லியிருக்காம்.
திலீபன்ர நினைவேந்தலுக்கு திலீபன்ர வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்திற மாதிரி புகைப்படக்கண்காட்சி வைச்சது. தமிழாராய்ச்சிப் படுகொலையை நினைவுகூர்ந்தது எண்டு கொஞ்சக் காரணங்களை அருக்கியிருக்குது பாதுகாப்பு அமைச்சு. இப்பிடி நினைவேந்தல் நடத்தினால் அது அரசாங்கத்துக்குப் பிடிக்காது எண்டதால, அந்தக் கடுப்பை இப்பிடி அனுமதி குடுக்காமல் காட்டியிருக்கினம் எண்டால் அதில ஒரு 'லொஜிக்' இருக்கு. ஆனால் இப்பிடி அனுமதி மறுத்ததுக்கு முதலாவதும் முக்கியமானதுமா சொல்லுப்பட்ட காரணத்தை ரணில் கூட ஏற்பாரோ எண்டது சந்தேகம்தான். அப்பிடி என்ன காரணம் சொன்னவை?
2020 ஆம் ஆண்டு நடந்த எலக்சனில நீங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில எலக்சன் கேட்டுக்கொண்டே, அந்தக் கட்சியின்ர செயலாளருக்கு எதிராப் பிரசாரம் பண்ணினதால கட்சியில இருந்து நிப்பாட்டுப்பட்டனீங்கள். அதால உங்களுக்கு அனுமதிதர ஏலாது எண்டதைத்தான் பாதுகாப்பு அமைச்சு. அனுமதி மறுப்புக்கு முதல் காரணமாச் சொல்லியிருக்கு.
சைக்கிள் கட்சியோட முரண்பட்டதுக்கும், பாதுகாப்பு அனுமதிக்கும் என்ன சம்பந்தம்? அவையோட மணிவண்ணன் தரப்பு சண்டை பிடிச்சால் ஏன் பாதுகாப்பு அமைச்சுக்கு வலிக்குது? ஒண்டுமே விளங்காமல் கிடக்கு கண்டியளோ? உங்களுக்காவது ஏதும் விளங்குதோ...........
(07.03.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.