நாடளாவிய ரீதியில், பாடசாலைகளுக்கு அருகிலும் மாணவர்களை இலக்காக வைத்தும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பலர் கடந்த சில நாள்களுக்குள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இலத்திரனியல் சிகரெட்கள், கஞ்சா மற்றும் மாவா போதைப்பாக்கு என்பவற்றின் விற்பனை முகவர்களாகச் செயற்பட்ட பலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். போதைப்பொருள் வியாபாரிகளால் மாணவர்களும்-இளம் வயதினருமே அதிகம் இலக்கு வைக்கப்படுகின்றனர். வடக்கு மாகாணத்திலும் இந்த அபாய நிலைமை இருக்கின்றது. பாடசாலைகளுக்கு அருகில் கடந்த காலங்களிலும் -போதைப் பொருள் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனாலும் மாணவர்களை இலக்கு வைத்துச் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதென்பது இன்னமும் இயலாதகாரியமாகவே இருக்கின்றது. அந்த வர்த்தகமும் வலைப்பின்னலும் தொடரவே செய்கின்றன.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துச் செயற்படும் போதைப்பொருள் வலைப்பின்னலின் மூலவேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எய்தவர்கள் தப்பிக்க அம்புகள் மட்டுமே சிக்கும் கதையின் மற்றொரு அத்தியாயமே இப்போது எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றதே தவிர, இப்போது கைதுசெய்யப்படுபவர்களும் போதைப் பொருள் மாபியாக்களின் பிரதானமானவர்களோ அல்லது முக்கியமான புள்ளிகளோ இல்லை. இதுவே உண்மை.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவரைக் கைதுசெய்தால், அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதுடன் பொலிஸார் தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றனர். கைது செய்யப்பட்டவருக்குப் போதைப்பொருள் எவ்வாறுகிடைத்தது என்பதுபற்றியோ, போதைப்பொருளை விநியோகிப்பவர் தொடர்பாகவோ விசாரணை நடத்தி அந்த வியாபாரச் சங்கிலியைக் கண்டறிந்து தகர்க்கவோ பொலிஸார் முயற்சிப்பதில்லை. போதைப்பொருள் வர்த்தகர்களினதும், இடைத்தரகர்களினதும் பட்டியல் மிகநீட்சியாகச் செல்வதற்கு, பொலிஸாரின் 'ஆழ ஊடுருவாத மேலோட்டமான நடவடிக்கைகளும் பிரதான காரணங்களே. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலவேரைக் கண்டறிந்து அகற்றாத பட்சத்தில், 'யுக்திய'போன்ற எந்த விசேட நடவடிக்கையும் உரிய பயனைத் தரப்போவதில்லை என்பதே இன்று எஞ்சி நிற்கும் நிதர்சனம்.
வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு அருகிலும், தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகிலும் போதைப்பொருள் விற்பனையும் கைமாற்றல்களும் இடம்பெறுவது ஒன்றும் பரம இரகசியம் அல்ல. அத்தகைய போதைக் குழுக்களின் நடமாட்டத்தைத் தவிர்ப்பதற்காக, வடக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகள் கடந்த காலங்களில் தனியார் கல்வி நிலையங்கள் உள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்து உட்படப் பல திட்டங்களை நடைமுறைப் படுத்துவதாகக் கூறியபோதும், அவை எல்லாமே வெறும் வாய்ப்பந்தல்களாகவே இருந்தனவே தவிர உருப்படியான வகையில் செயற்பாட்டுக்கு வரவில்லை. இந்த வாய்மொழி அறிக்கைகளுடன் போதைக் கெதிரான நடவடிக்கைகள் முற்றுப்பெறும் வரையில், போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே இருக்கும்.
(17.03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
v5njsy
bt8sxk
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.