(புதியவன்)
சமீப நாட்களாக காதல் என்ற பெயரில் அரங்கேறும் கொலை, பாலியல் துர்நடத்தை சம்பவங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே ஒரு இளம் பெண்ணைக் கொன்று, அவரது உடலைப் புதைக்க திட்டமிட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த செய்திகள் இந்திய ஊடகங்களில் வெகுவாக இடம்பிடித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அருண் ஸ்டாலினின் மனைவி பிரின்ஸி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே ஆலையில் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த (27) வயதுடைய திவாகர் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே, 'நகை வேண்டும், பணம் வேண்டும்' என்று திவாகரை பிரின்ஸி தொந்தரவு செய்து வந்துள்ளார். இவரது தொல்லையால் திவாகர் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகி அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார் . இதற்கு தனது உறவினரான இந்திரகுமார் வயது (31) என்பவரையும் உடந்தையாக இணைத்துக்கொண்டு. மேலும், மகிழுந்தில் பல்லடத்துக்கு வருமாறு தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார்.
10ஆம் திகதி இரவு பிரின்ஸியை வரவழைத்து, அவரை மகிழுந்தில் வெகுதூரம் ஏற்றிச்சென்று, அன்பாக கதைத்து பசாங்கு செய்து, கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்து, பின்னர், அவரது உறவினரான இந்திரகுமாருடன் இணைந்து உடலைப் புதைக்கத் திட்டமிட்டு, மதுரை நோக்கி மகிழுந்தில் இந்திரகுமாரும், உந்துருளியில் திவாகரும் சென்றுள்ளனர்.
இடம் தேடி திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி பிரிவு வந்ததும், சாலையோரம் மகிழுந்து மற்றும் உந்துருளியை நிறுத்திவிட்டு, உடலைப் புதைப்பதற்கு இருவரும் இடம் தேடியுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த மதுரை நெடுஞ்சாலை உளவுப் பொலிஸார், இவர்களின் செயலை கண்டு சந்தேகமடைந்து, மகிழுந்தை சோதனையிட்டுள்ளனர். அப்போது, மகிழுந்தில் இருந்த பெண்ணின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, இந்திரகுமார், திவாகர் ஆகியோர் தப்பியோட முயன்ற போது பொலிஸார் அவர்களை விரட்டிப் பிடித்து, திண்டுக்கல் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த அம்மைய நாயக்கனூர் பொலிஸார் நடத்திய விசாரணையில், பெண்ணைக் கொலை செய்து, உடலை புதைக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்த பொலிஸார், பெண்ணின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மகிழுந்தையும், உந்துருளியையும் பறிமுதல் செய்ததுடன் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காதல் என்ற போர்வையில் அரங்கேறும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இது தொடர்பில் தமிழக பொலிஸார் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.