முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டில், 'எல்நினோவின் தாக்கம் வரலாற்று ஆபத்தை ஏற்படுத்தும் என்று புவியியலாளர்களும் சூழலியலாளர்களும் எச்சரித்திருந்த நிலையில், இந்த எச்சரிக்கைகளை விடவும் மேலானதாகவே அதன் ஆபத்தம்சங்கள் அதிகரித்திருக்கின்றன. கிராமப் புறத்தில் வசிக்கும் மக்கள், பசுமைசார் சூழலால் வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொண்டாலும் நகரப்பகுதியின் கதையோ அதோகதிதான். பல்வேறு தேவைகளுக்காக நகரப் பகுதிகளை நாடும் அப்பாவிப் பொதுமக்களும், அடித்தட்டு மக்களும் காய்ந்து கருவாடாகி வலுவிழந்து பலமிழந்து நடந்துதிரியும் காட்சிகளை இப்போது இலகுவாகக் காணக்கிடைக்கின்றது. வெம்மையின் தாக்கம் தவிர்க்கப்பட முடியாததுதான். ஆனால், வெம்மைத் தாக்கத்தில் இருந்து எம்மவர்களைக் காப்பாற்ற வழியில்லையா? என்ற கேள்வி இதயத்தின் ஒரு மூலையில் துருத்தவே செய்கின்றது. இங்குதான் தாகசாந்தி நிலையங்கள் அமைத்தல், தண்ணீர்த் தொட்டிகள்நிறுவுதல், தண்ணீர்த் தட்டுப்பாடான பிரதேசங்களுக்கான இலவச குடிநீர் விநியோகம், நிழற்குடைகள் அமைத்தல், வெம்மையால் உண்டாகும் நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல் போன்ற அறப்பணிகளின் அவசியம் மேலெழுகின்றது.
தொண்டு நிறுவனங்களின் பணிகளும், வர்த்தக நிறுவனங்கள் மேற்கொள்ளும் அறப்பணிகளும் ஒரு சமூகத்துடன் இரண்டறக் கலந்தவை. ஒரு சமூகம் கல்லியிலும் கலைகளிலும் கலாசாரத்திலும் இடர்பாடுகளின்போதும் நேரானதும் சீரானதுமான பாதையில் பயணப்பட வேண்டுமாயின், தனியார் நிறுவனங்களினதும் தொண்டு நிறுவனங்களினதும் வகிபங்கு அங்கு தவிர்க்க முடியாததும் காலத்தேவையானதுமாகும். இது உலக நியதி. வெறுமனே அரச திணைக்களங்களாலும் அரச நிறுவனங்களாலும் மட்டும் அறப்பணிகளை சமூக நலன்சார் செயற்றிட்டங்களை மேற்கொள்ளமுடியாது. நிதி ஒதுக்கீடு, ஆளணி போன்ற ஏகப்பட்ட சவால்களை இந்தப் பணிகளின்போது சந்திக்க வேண்டியிருக்கும். ஆதலால்தான், அரச நிறுவனங்களின் இயலுமைக்கு அப்பாற்பட்ட வகிபங்கு இந்த விடயங்களில் எதிர்பார்க்கப்படுகின்றதுடன், அது தவிர்க்கப்பட்ட முடியாததாகவும் இருக்கின்றது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போர்தின்ற பூமியான வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படுகின்ற அனேகமான அறப்பணிகள் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்படுகின்றனவே அன்றி. ஒரு முறையான பலமான நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பு இங்கில்லை. இதுவொரு பெரும்குறை நிறுவன மயப்படுத்தப்பட்ட அந்தக் கட்டமைப்பு இருந்திருந்தால் எல் நினோ வெம்மை மற்றும் அதீத மழைபோன்ற இடர்பாடுகளில் இருந்து மக்களினதும், நாட்டினதும் மீட்சி மிக இலகுவில் வசப்படும் விடயமே பொருளாதாரச் செயற்றிட்டங்கள் முதல் தற்காப்புச் செயற்றிட்டங்கள் வரையில் எண்ணற்ற திட்டங்களை இந்த வெம்மைக் காலத்தில் செயற்படுத்தியிருக்கலாம். ஆனால், அறப்பணிகளுக்கும், தாயகத்தில் நிலைபெற்றிருக்கும் ஏராளமான தனியார் நிறுவனங்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லா நிலையே காணப்படுகின்றது.
இரை வலுவிழக்கும் வரையில் காத்திருந்து கொன் நுண்ணும் பிணம்தின்னிக் கழுகுகளைப் போன்றுதான் இங்குள்ள பல தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இயற்கை இடர்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படும் கனடா, தென்அமெரிக்கா போன்ற நாடுகனில் வர்த்தக நிறுவனங்களின் அறப்பணிகளே அந்த நாடுகளையும் மக்களையும் பல்வேறுபட்ட இடர்பாடுகளில் இருந்து தூக்கிவிட்டிருக்கின்றன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வருடம் ஏற்பட்ட உலகின் ஆகப்பெரும் காட்டுத்தீயின்போது. 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்களைவதாம் நட்பு' என்ற வாறாக வர்த்தக நிறுவனங்கள் செயற்படுத்திய அறப் பணிகளே பேரிடரில் இகணடாவை மீட்டெடுத்தன இந்தத் பாரத்தை மேற்கத்தேயப் பொருளாதாரப் பண்புகளை இலங்கைக்குள் வளர்த்தெடுக்கும் போதுதான் நீடித்த அபிவிருத்தி என்பது சாத்தியமாகும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.