நாட்டில் நிலவும் உச்சக்கட்டப் பொருளாதார நலிவுநிலையாலும், வரலாறுகாணாத பின்னடைவாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சொல்லிமாளாதவை, இந்தப் பாதிப்புகள் தொடர்பான பட்டியல் மிக நீட்சியானது. ஆனால், அவ்வாறு பட்டியலிடுகின்ற பாதிப்புகளைவிட வரலாற்றுப் பின்னடைவொன்று இந்தப் பொருண்மிய நலிவுநிலையுடன் இரண்டறக் கலந்ததாக வியாபித்திருக்கின்றது. அதுதொடர்பில் அரசாங்கமோ அல்லது துறைசார் வல்லுநர்களோ அவ்வளவாக கரிசனை கொண்டதாக இல்லை. அதுதான் மாணவர் இடைவிலகல்கள்.
இலங்கையில் தற்போதுள்ள இந்தப் பொருளாதார நலிவுநிலையால் பாடசாலைகளில் மாணவர்கள் இடைவிலகும் செயற்பாடுகள் மிக அதிகம் என்று எச் சரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தீவின் 30க்கும் குறையாத வருடங்களை உள்நாட்டுப் போர் விழுங்கிய போதிலும் எழுத்தறிவிலும் படிப்பறிவிலும் இலங்கையர்கள் ஆசியாவில் உயர் சராசரியுடன் தனித்து நிற்கின்றனர். ஆனால், இந்தக் கற்றறிவு வீதமும் அது சார் பெருமைகளும் இனிவரும் காலத்தில் இதே போன்று பேணப்படுமா? என்ற பரிசீலனை இப்போது காலத்தேவையானது.
நாட்டில் இப்போதிருக்கும் பொருளாதார நலிவுநிலையானது அனைவருக்கும் பொதுவானதுதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இருக்கமுடியாது. ஆனால், இடைத்தட்டு அடித்தட்டு மக்கள் இந்தப் பொருண்மியப் பேரவலத்தால் இன்னுமின்னும் வதை படுகின்றனர் என்றால் அது விவாதிக்க ஏதுமற்று ஏற்க வேண்டிய ஒற்றைக் கூற்றே.
கட்டுமானப் பொருள்களுக்கான விலைகள் வானைத் தொட்டுள்ளன. இதனால் கூலித்தொழிலானர்களின் வேலை வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக குறைவருமான முள்ள வேறு தொழில்களைத் தேட நிர்ப்பந்திக்கப்பட் டுள்ளனர். இதைவிட, மண்ணெண்ணையின் விலையேற்றத்தால் மீனவ சமூகம் தன் வருவாயை இழந்து தத்த வித்துக் கொண்டிருக்கின்றது. நடுக்கடல் மீன்பிடியெல்லாம் எப்போதாவது நடக்கின்ற விடயமாக ஆகி விட்டது. இதைவிட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றங்கள் குருவியின் தலையில் வைக்கப்பட்ட பனங்காயாக அனுதினம் இலட்சோபலட்சம் குடும்பங்களை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக வாழ்வதற்கே வழியில்லை என்ற நிலையில், கல்வியை தம் பிள்ளைகளுக்கு வழங்குவதெல்லாம் இனி ஏழைக் குடும்பங்களின் அடுத்தகட்டத் தெரிவுதான். அதனால், மாணவர்கள் தம் கற்றல் செயற்பாடுகளை முடிவுறுத்திக்கொள்ளும் ஆபத்து நிலை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
பொருண்மிய நலிவுநிலை ஏற்படுத்தும் ஆகப் பெரிய பாதிப்பு இதுதான். மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகுவதால், இலங்கை அதன் கல்வித் தரத்தை இழக்கும். கற்றறிந்தோரின் சராசரியை இழக்கும் அவலமும் ஏற்படும். இதிலிருந்து இந்த நாட்டையும் - எதிர்கால சந்ததியையும் காப்பாற்ற வேண்டியது எம் அனைவரினதும் தலையாயகடமையும் பொறுப்புமாகும். இலங்கையில் கல்விக் கொள்கை சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதற்குரிய நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவே தெரியவருகின்றது. ஆனால், அனைத்துக்கும் முன்னர் "பொருளாதாரத்தின் அடிப்படையிலான மாணவர் களின் இடைவிலகலுக்கு' அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் தீர்வைத் தேடவேண்டும். ஏனெனில் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.