(ஆதவன்)
பாதுகாப்புப் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் தொடர்புகளை ஏற்று அரசு மன்னிப்புக் கோரவேண்டும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை இலங்கையில் காணாமல் ஆக்கப்படல் மீளவும் நிகழ்வதற்கான உறுதியான ஆபத்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அளவையும் மற்றும் காணாமலாக்கப்படலில் பாதுகாப்பு படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான பொதுமன்னிப்பை இலங்கை அரசு கோரவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் பாதுகாப்புப் படையினராலும் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய துணை இராணுவக் குழுக்களாலும் அவர்களின் எதிரிகளாகக் கருதப்படுப்வர்களை அச்சுறுத்தி ஒடுக்குவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நோக்கில் குறைந்தது பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகவுள்ளது.
அனைத்து படிநிலைகளிலும் குற்றவாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பித்து வருகின்றார்கள். தண்டனையின் பிடியிலிருந்து தப்பிப்பதானது ஆழமாக வேரூன்றியுள்ளது. குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களின் கதி மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலெதனையும் அறியமுடியாத நிலையில் உள்ளன. கட்டமைப்புகளின் பலவீனங்களைக் கையாள்வதிலும் அவசியமான சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதிலும் தோல்விகள் ஏற்பட்டுள்ளதால் காணாமல் ஆக்கப்படல் மீளவும் நிகழ்வதற்கான ஆபத்து உறுதியாகக் காணப்படுகின்றது என்று முகவுரையில் குறிப்பிட்டுள்ளது.
ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அளவையும் மற்றும் காணாமல்ஆக்கப்படலில் புலி பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான பொதுமன்னிப்பை இலங்கை அரசு கோரவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்படல் தொடர்பிலான விசாரணைகளையம், வழக்கு விசாரணைகளையும், வழக்குகளையும் தொடர்வதற்கு ஏற்ப பயனுள்ள கட்டமைப்பை உறுதிப்படுத்தவும் மற்றும் சுதந்திரமான விசாரணைகளைத் தீவிரப்படுத்தவும் அரசமைப்பு மற்றும் சட்டசீர்திருத்தங்களை விரைவுபடுத்துமாறு இலங்கைக்கு அழைப்புவிடுக்கின்றோம். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மிகப்பெரிய மீறல்கள் மற்றும் மோசமான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு சுயாதீனமான அரச சட்டத்தரணிகளின் அதிகாரம், ஒரு சிறப்பு அரச சட்டத்தரணி மற்றும் தற்காலிக ஒரு சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றை உடனடியாக இலங்கை நிறுவவேண்டும்.
அதிகளவான பரிந்துரைகள், காணாமற்போனோருக்கான அலுவலகத்தை மேம்படுத்துதல் மிகப்பெரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சிறந்த முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தல் மற்றும் தொடர்புடைய காப்பகங்கள் மற்றும் ஆணைக் குழுக்களின் அறிக்கைகளிலிருந்து தகவல்களை கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு புதிய உண்மையைத்தேடும் பொறிமுறையேனும் நிறுவப்படுவதற்கு முன், மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குழுக்களுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கண்காணிப்பு அனைத்து வகையான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற செயல்கள் நிறுத்தப்படுதல் உள்ளிட்ட முக்கியமான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்க வேண்டும்.
எந்தவொரு உண்மையைத் தேடும் பொறிமுறையும் நீதித்துறை பொறி முறையை உள்ளடக்கிய விரிவான ஒரு நிலைமாறுகால நீதிக்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். இதேபோல் ஒரு விரிவான மற்றும் பால் நிலை - உணர்திறன் கொண்ட அணுகுமுறையை இழப்பீடுகளுக்குப் பரிந்துரைக்கிறது.
நம்பத்தகுந்த வகையில் மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உயர்மட்டப் பதவிகளுக்கு நியமிப்பதை அல்லது ஊக்குவிப்பதைத் தவிர்ப்பது உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்படல் மீண்டும் நிகழாமல் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் ஊடாக இலங்கையின் பொறுப்புக்கூறலை நோக்கிய அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச சமூகம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிப்பதுடன் அதன் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள், உலகளாவிய அதிகார சட்டவரம்பு மற்றும் சர்வதேச நீதித்துறையில் உள்ள பிறவழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது உட்பட இலக்குத் தடைகள் விதித்தல் போன்ற பொறுப்புக் கூறலை உறுதிப் படுத்தவல்ல அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும், ஆகியனவற்றைக் குறிப்பிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.