முன்னாள் தளபதி தெரிவிப்பு!
(ஆதவன்)
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய குழுக்கள் தற்போதைய அரசியலில் இருப்பதால் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அதன் காரணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசியல் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பொருளாதார நெருக்கடியால் நாடு எத்திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது? பாதுகாப்பை விட தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான பணிக்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இது அரசியல் ரீதியிலான பிரச்சினையும் கூட. எனவே, ஐக்கிய மக்கள் சக்தி என்ற குழுவால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றோம்.
இதற்குத் தேவையான ஒத்துழைப்பை இராணுவத்தினர் என்றவகையில் நாம் வழங்குவோம். நாட்டையும், நாட்டு மக்களையும் நெருக்கடியில் இருந்து மீட்கவே நாம் மீண்டும் வந்துள்ளோம். 2019ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில் நான் போட்டியிட்டேன். சஜித் பிரேமதாஸவும் களமிறங்கினார். மற்றைய தரப்பிடம் ஆட்சி அதிகாரம் சென்றால் என்ன நடக்கும் எனச் சுட்டிக்காட்டினோம். இறுதியில் நாம் அனைவரும் நெருக்கடி நிலைக்கு உள்ளானோம். நாடு தற்போது பயணிக்கும் வழியைப் பார்க்கும் போது மீண்டும் தீவிரவாதம், கிளர்ச்சி. புரட்சி மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு நாட்டைக் கொண்டுவரக்கூடிய குழுக்கள் அரசியலில் உள்ளன.
எனவே, இதுபற்றி நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பொறுப்பு எம்மைப்போன்ற பொறுப்புமிக்கவர்களுக்கு உள்ளது. அடுத்த தேர்தலின்போது சரியான தலைமைத்துவத்தையும், குழுவையும் தெரிவு செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நாம் காணும் சிறந்த தலைமைத்துவம், குழு ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.