(புதியவன்)
வாழைச்சேனையிலிருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இயந்திர படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கடற்படையினர் மீட்டுள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை நிந்தவூர் 9 ஆம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க கடந்த 12 ஆம் திகதி கடலுக்கு சென்றுள்ளனர். ஆழ்கடலில் படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
கடல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கண்டுள்ளனர். மூன்று மீனவர்களை உயிருடன் மீட்டனர். ஒருவரை சடலமாகவும் மீட்டனர். மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று மருத்துமனையில் சேர்த்துள்ளனர். மற்றைய இருவரையும் இறந்தவரின் சடலத்தையும் நேற்று இரவு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு கடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வாழைச்சேனை மருத்துமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.