எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம்
எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம்

எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம் முள்ளிவாய்க்கால் மண்ணில் சபதம்

(ஆதவன்)

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுநாளில் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம்- இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது ஆதீன முதற்குரு தவத்திரு ஏக அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:-


தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் 'இனிமேல் இது நடக்கவே கூடாது' என்ற உணர்வுப் பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது. இனிமேல் நடக்கவேகூடாது என்ற உணர்வுப் பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன் முறையாக காலனித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

தமிழினப் படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது. புவிசார் அரசியல் நலன்களின் பிராந்தியத் தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காகப் பேரரசுக்  கட்டமைப்பை துணைக்குத்தகைக்கு விட்டுள்ளது. அதனுடைய ஒருவடிவமாகத்தான் இஸ்ரேலையும் இலங்கையையும் அவதானிக்கவேண்டும். தமிழினப்படுகொலை நடந்து 15 ஆவது ஆண்டில் பலஸ்தீனப் படுகொலை அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

பலஸ்தீனமும் ஈழமும்

பலஸ்தீனப் படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப் படுகொலைக்கும் நடைபெற்றுக்கொண் டிருக்கும் பலஸ்தீனப் படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம். ஆசியாவில் இலங்கைத் தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும் மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது. பேரரசைக் கட்டமைப்பதற்கு அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக்காட்டுகின்றன. பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளவாடங்களுக்கும் பேரரசின் பொருளாதார இருப்புக்கும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.


ஏக பேரரசை கட்ட முயலும் நாடுகள்தான் மனித உரிமையையும் பொறுப்புக் கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத்தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத் தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2002 பேச்சு முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாக இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாக உள்ளது. அதுவே இன்று காஸாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றது.


பலஸ்தீன படுகொலை ஆச்சரியமில்லை

ஐ.நா. சபையும் அதன் ஏனைய அலகுகளும் சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தைத் தடுக்கமுடியாமல் போனதோ அதே போல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை.

தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன. அது தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் மீது, பண்பாட்டின் மீது, கல்வியின் மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள் மீது, சைவத்தலங்கள் மீது, தொல்லியல் வரலாறு மீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாக இருக்கலாம்.


உளவியல் போர்

ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருதவேண்டியுள்ளது. உளவியல் போரின் நோக்கம், ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும். தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள்தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரஞ்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது. தமிழ்த் தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின்வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சு றுத்தலை எதிர்கொள்கின்றது.

விலகிச் செல்லமுடியாது

தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்துப் போராட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குள் தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த தமிழினத்துக்கானது. யாரும் இந்தப்பெரும் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம்.


காப்புச் சபதம் எடுக்கிறோம்

 முள்ளிவாய்க்கால், பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்ளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம். அதன் அடிப்படையில், நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே இலங்கை அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது.

தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது. அந்தக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளைத் தன்னகத்தேகொண்ட இனம். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இதுவும் இன அழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம்.

 தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும். எம் பாசமிகு உறவுகளே! தமிழ்த் தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது - என்றார்

170 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.