வெளிநாட்டுப்பிரஜை கைது!
(ஆதவன்)
போலிக்கடவுச்சீட்டு, போலி வைப்பகப்புத்தகம், போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, ஆள்மாறாட்டம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நெதர்லாந்துப் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அவரது சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கடவுச்சீட்டில் நெதர்லாந்துக்குச் சென்று அங்கு குடியுரிமையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, சகோதரி 2019ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது அவரது பெயரில் முன்னரே கடவுச்சீட்டு எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சகோதரி வெளிநாட்டில் இருந்தமையால் அவர் நாடு திரும்பிய பின்னர் நடவடிக்கை எடுப்பதற்காக சகோதரி காத்திருந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி வைப்பகப்புத்தகம் பெற்றமையையும் சகோதரி அறிந்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் தாயாரின் இறுதிக்கிரியைகளுக்காக நெதர்லாந்திலிருந்து சகோதரி யாழ்ப்பாணத்துக்கு இந்த மாதம் வந்துள்ளார்.
இதையடுத்து யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பிரகாரம் சந்தேக நபரை யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் நேற்று முற்படுத்தினர். இதன்போது மருத்துவக் காரணங்களால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்படவுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.