கணக்காய்வு அறிக்கை வெளியீடு!
(புதியவன்)
கடந்த காலங்களில் இடம்பெற்ற மருந்துக் கொடுக்கல்வாங்கல்களின் 926 மில்லியனுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்காக கணக்காய்வாளர்களால் நடத்தப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கைக்கமைய 2022 - 2023 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட 77 வகையான மருந்துக் கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 11 வகையான மருந்துகள் தொடர்பில் முழுமையான தகவல்களை ஆராயாமல் அவசர கொள்வனவுகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு 709 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும் நான்கு மருந்துகள் தொடர்பில் பூர்த்தியாகிக்கொண்டிருந்த முற்பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் அந்த மருந்துகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 167 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கைக்கமைய கணக்காய்வாளர் நாயகம் அரசாங்கத்திடம் சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
மக்களுக்கு உயர்தர மருந்துகளை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட தேசிய ஒளடதங்கள் கட்டுபாட்டு அதிகார சபை அந்த நோக்கங்களில் இருந்து விலகி நோய்வாய்ப்பட்ட மக்களை மேலும் ஆபத்தில் தள்ளியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறுப்புக்கூற வேண்டிய தலைமை நிறைவேற்று அதிகாரி கொள்முதல்களுக்கு ஒப்புதல் அளித்த நிர்வாகக் குழுவை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.