(புதியவன்)
இலங்கையிலிருந்து சென்னை வழியாக குஜராத் சென்ற நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறுபட்ட நாசவேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநிலத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஆராய்ந்ததில் இலங்கையைச் சேர்ந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய நால்வரும் கொழும்பில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத்துக்கு செல்வதற்கான வானூர்தி நுழைவுச்சீட்டு முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தமை தெரியவந்தது.
இலங்கை புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், இவர்கள் நால்வரும் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார்கள் எனவும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இரவு இண்டிகோ வானூர்தி மூலம் அகமதாபாத் வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய நால்வரையும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்து கைது செய்தனர்.
இது குறித்து குஜராத் காவல்துறை தலைமை இயக்குனர் விகாஸ் சஹாய் மற்றும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளான ஹரிஷ் உபாத்யாயா, சுனில் ஜோஷி ஆகியோர் தெரிவிக்கையில்,
"இவர்கள் நால்வரும் தமிழ் மொழியில் மட்டும் பேசுகிறார்கள். அத்தோடு பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் அபு பக்கரின் உத்தரவின் பேரிலேயே நால்வரும் செயல்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருவதோடு, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21, 22 களில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்தச் சூழலில், நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அத்தோடு பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான நுபுர் சர்மா, ராஜா சிங், உப்தேஷ் ரானா ஆகியோரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்களின் கைத்தொலைபேசிகளை ஆராய்ந்ததில் இது தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒரு தீவிரவாதியின் கைத்தொலைபேசியில் அகமதாபாத்தின் நர்மதா நதி கால்வாயின் புகைப்படம் இருந்தது. சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததில், 20 துப்பாக்கி ரவைகளைக் கொண்ட, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கொடி ஆகியவற்றை கைப்பற்றினோம். என்றனர்.
பொதுவாக சென்னை பொலிஸார் தீவிரவாதச் செயல்கள் மற்றும் அதிதீவிர குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து உன்னிப்பாக கண்காணிப்பார்கள். அதிலும், தமிழக காவல்துறையின் ‘க்யூ’ பிரிவுப் பொலிஸார் மிகவும் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். சிறப்பாக இலங்கையில் இருந்து சென்னை வானூர்தி நிலையத்துக்கு வரும் பயணிகள் யார், அவர்களது பின்னணி என்ன என்பது மிகவும் அவதானமாகக் கவனிக்கப்படும்.
ஆனால், தற்போது சென்னையில் இருந்து நழுவிச் சென்று குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு தீவிரவாதிகளும் சென்னையில் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேல் தங்கி இருந்தும், தமிழகத்தின் அனைத்து வகையாக உளவுப் பிரிவு பொலிஸாரின் பார்வையில் இருந்தும் தப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இது தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்த பொலிஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்தோடு க்யூ பிரிவு பொலிஸாரும் இது தொடர்பில் தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.