ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது என்ற கொள்கை முடிவை ஆதரிப்பதா? இல்லை எதிர்ப்பதா? என்ற தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் ஆராயப்பட்டபோதும் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் அந்தக் கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பது கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பில் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்துகள் வெளியாகியிருந்தன.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நோர்வே தலை நகர் ஒஸ்லோவில், நோர்வேயின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுகளின் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயம் இரா.சம்பந்தனால் பேசுபொருளாக்கப்பட்டிருந்தது. 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும் - புலிகளும் ஆராய்வர்' என்பதே ஒஸ்லோ அறிக்கையில் உள்ள விடயம். இதை ஒஸ்லோப் பிரகடனம், ஒஸ்லோ ஒப்பந்தம் என்று ஆளுக்காள் அர்த்தப்படுத்திக்கொள்கின்றனர். இதற்குக் குறைவான தீர்வுக்கு இணங்கமுடியாது எனவும் அதாவது 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வை' விடக்குறைந்த அரசியல் தீர்வுக்கு இணங்கமுடியாது எனவும் அதனால் தமிழ்ப்பொது வேட்பாளர் யோசனையை எதிர்ப்பதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் தெரிவித்ததாகச் சொல்லப்படும் விடயத்தை யொட்டி இரண்டு கேள்விகள் எழுகின்றன. தமிழ்ப்பொது வேட்பாளராக நிறுத்தப்படுபவரின் கொள்கை நிலைப்பாடுகள் தொடர்பில் தமிழ்ச் சிவில் சமூகம் தெளிவான தீர்மானங்களை அறிவித்திருந்தது. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்காலக் கட்டமைப்புகளை நோக்காகக் கொண்டு செயற்படுவது' என்ற கொள்கை முடிவை அது எடுத்திருந்தது. சம்பந்தன் அச்சப்படுவதைப்போன்று ஒஸ்லோ அறிக்கையில் சொல்லப்பட்ட அரசியல் தீர்வை விடக் குறைவான தீர்வு முன் மொழிவை தமிழ் பொதுவேட்பாளர் முன்வைக்கப் போவதில்லை. அப்படியிருக்கையில் சம்பந்தன் இந்தக் காரணத்தைக் குறிப்பிட்டு தமிழ்ப்பொதுவேட்பாளரை எதிர்ப்பது அபத்தம் என்றே சொல்லவேண்டியிருக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரா.சம்பந்தன் கடந்த 14ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கங்களுடனான பேச்சுகளின் போது ஒஸ்லோ அறிக்கை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தவில்லை என்பது மாத்திரமல்லாது, அதைவிடக் குறைந்த ஒற்றையாட்சி அரசமைப்பை தொடர்ந்தும் பேணும் வகையிலான புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கும் முட்டுக்கொடுத்திருந்தார். நல்லாட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய அரசமைப்பு ஏக்கியராஜ்ஜிய/ஒருமித்த நாடு என்று புதிய சொற்றொடர் ஊடாக முலாம்பூசிய ஒற்றையாட்சி அரசமைப்புக்கு சம்பந்தனும் - சுமந்திரனும் இணங்கினர் என்பது முக்கியமானது. அது மாத்திரமல்லாது, பௌத்தத்துக்கு முதலிடம் என்ற கோட்பாட்டை ஏற்கின்றோம் எனப் பகிரங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்ட துடன் அதை நியாயப்படுத்தியும் இருந்தார். இதற்கு அப்பால், புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது வடக்கு -கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை எனத் தெரிவித்தவர் சுமந்திரன்.
ஒஸ்லோ அறிக்கைக்கு நேர் எதிராக 180பாகை கோணத்தில் செயற்பட்ட சம்பந்தன் - சுமந்திரன் இணை தான், ஒஸ்லோ அறிக்கைக்கு குறைவான தீர்வுக்கு இணங்கமுடியாது என்பதால் தமிழ்ப்பொதுவேட்பாளரை எதிர்ப்பதாகக் கூறுவது நகைப்புக்கிடமானது. அதுவும் தமிழ்ப்பொதுவேட்பாளரின் கொள்கை நிலைப் பாடாக அவ்வாறானதொரு விடயம் இல்லாத நிலையில், இல்லாததை உள்ளதாக்கி மக்களை ஏமாற்ற முனைவது அபத்தத்திலும் அபத்தம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.