(மாதவன்)
சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இன்று பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக இருந்த வேளை நேற்றைய தினம் போராட்டம் ஆரம்பமானதோடு இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காக தென் பகுதியில் இருந்து மக்கள் விகாரைக்கு வந்திருந்தனர்
இதன்போது காணிக்கு சொந்தமான மக்கள் அணி திரண்டு, அனுமதியின்றி மக்களது காணியில் கட்டப்பட்ட குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "தையிட்டி எங்கள் சொத்து, வடக்கு கிழக்கும் தமிழர் தாயகம், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, பலாலி பொலிஸ் பொறுப்பு அதிகாரி ஒரு கொலைகாரன், பௌத்தத்தின் பெயரால் காணிகளை அபகரிக்காதே, இந்த மண் எங்களின் சொந்த மண், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா, பௌத்தத்தின் போதனை சட்டவிரோத ஆக்கிரமிப்பா" என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்யதோடு இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.