ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் சர்வதேச ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு மாதத்துக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டிருந்தநிலையில் அந்தப் பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நீடிக்கும் பின்னணியில் - ரைசி விபத்தொன்றில் உயிரிழந்திருக்கின்றமை பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது. இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கிச் சிதைவடைந்திருக்கும் நிலையில், அவருடன் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு சீரற்ற காலநிலையே காரணம் என்று சொல்லப்படுகின்றபோதும், ரைசியின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றது. ரைசி அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கும், இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் பெரும் சவாலாக இருந்தார். ஏனைய முஸ்லிம் நாடுகள் மௌனம்காக்கும் நிலையில், துணிந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுடன், பலஸ்தீனம் ஒரு தனிநாடு என்றும் அறிவித்திருந்த பின்னணியில், யாரும் எதிர்பாராத தருணத்தில் அவரது துர்மரணம் நிகழ்ந்திருக்கின்றது.
காலநிலைச் சீர்கேட்டால் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்டாலும், பல சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. மூன்று ஹெலிகொப்டர்கள் பயணித்தபோதும், ரைசி பயணித்த ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளானது, ஏனைய இரண்டும் பாதுகாப்பாகத் தரையிறங்கியிருக்கின்றன. எனவே ரைசியின் மரணத்துடன் இஸ்ரேல் மற்றும் ஏனைய இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் மறைகரங்கள் இருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. அதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு. கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக இஸ்ரேல் தன் எதிரிகளை இவ்வாறான மர்ம விபத்துகளை உண்டாக்கி தீர்த்துக்கட்டிய சம்பவங்கள் வரலாற்றில் நிறையவே உண்டு. இப்ராஹிம் ரைசியின் மரணத்தை அடுத்து இலங்கை அரசாங்கமும் ஒரு நாள் துக்க தினத்தை அறிவித்திருக்கின்றது. நீண்டகாலமாக ஈரானுடன் நல்லுறவைப் பேணும் நாடான இலங்கை ஈரான் மக்களின் துயரில் பங்கெடுத்துக்கொள்வதில் எவரும் குற்றங்கண்டுவிடமுடியாது. மறைந்த இப்ராஹிம் ரைசி இலங்கையுடன் - தற்போதைய ஜனாதிபதி ரணிலுடன் அதிக நெருக்கத்தைக் கொண்டிருந்த ஒருவர். அண்மையில் இலங்கை வந்திருந்த ரைசி, ஈரானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட உமா ஓயாத் திட்டத்தை மக்களிடம் கையளித்திருந்தார். இலங்கைக்கு மேலும் பல உதவித் திட்டங்களை வழங்கவும் உறுதி தெரிவித்திருந்தார். அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான போக்கைக் கொண்ட ரைசியின் இலங்கை வருகைக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் நேரடியாகவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. ஈரானுடன் உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையும் அமெரிக்காவிலிருந்து வெளியாகியிருந்தது. ஆனால் இலங்கை அவற்றை எல்லாம் மீறி ஈரான் ஜனாதிபதியை வரவேற்றிருந்தது.
இலங்கை தனது நீண்டகாலப் பங்காளிகளுடன் உறவு கொண்டாடுவது எவ்விதத்திலும் பிழையானது அல்ல. ஆனால் தற்போதைய உலக ஒழுங்குகளையும் இலங்கை கவனத்தில் கொள்ளவேண்டும். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி அனைத்து நாடுகளிடமும் கையேந்தி நிற்கும் இலங்கை, தேவையற்ற இடியப்பச் சிக்கல்களுக்குள் சிக்கிக்கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. ரைசியின் மறைவு உணர்த்தும் செய்தியை புரிந்துகொண்டு அணிசேராக் கொள்கையை செயற்பாட்டிலும் கொண்டிருப்பதே இலங்கைக்கு எப்போதும் நன்மையைத் தரும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.