(புதியவன்)
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மலையகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினூடாக பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கு உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வெள்ள மற்றும் மண்சரிவு இடர்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.
இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதும், இடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனும் இடர் அபாயம் இருப்பின் அது தொடர்பில் பெருந்தோட்ட நிதியத்துக்கு அல்லது கிராம அலுவலருக்கு அல்லது தோட்ட அதிகாரிக்கு அறிவிக்குமாறும் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.