நீர்த்துப்போகுமா நீதிப்பொறிமுறை!!
நீர்த்துப்போகுமா நீதிப்பொறிமுறை!!

அரச தலைவர் தேர்தல் தொடர்பில் இரா.சம்பந்தன் கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையில் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில், நோர்வேயின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுகளின் அறிக்கையில் சொல்லப்பட்ட 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும்-புலிகளும் ஆராய்வர்' என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒஸ்லோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை விடக் குறைந்த அரசியல் தீர்வுக்கு இணங்கமுடியாது என்பதால் தமிழ்ப்பொதுவேட்பாளர் யோசனையை எதிர்ப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இங்கே, சம்பந்தன்-சுமந்திரன் இணை மஹிந்த ராஜபக்ச காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறிலங்கா அரசுடனான பேச்சுகளாகட்டும் சரி, அதன் பின்னர் நல்லாட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு முயற்சிகளாகட்டும் சரி ஒஸ்லோ அறிக்கை தொடர்பில் மூச்சே காட்டவில்லை என்பது முக்கியமானது.

சம்பந்தன் சொன்னதாகத் தெரிவித்து சுமந்திரன் முன்வைத்த இந்தக் கருத்துகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டபோது, தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாடுகளை பொதுவெளியில் வெளிப்படுத்தியிருந்த சிறீதரன், பதிலடியாக, ஒஸ்லோ அறிக்கையை முன்வைக்கும்போது எந்த அரச தலைவர் வேட்பாளர் அதை ஏற்றுக்கொள்கின்றாரோ அவரை ஆதரிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அரசியல் தீர்வு முயற்சிக்கான முக்கியமான மைல்கல்லாக அதைப் பார்க்கமுடியும் என்றபோதும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சம்பந்தன் சுமந்திரன் இணை திட்டமிட்ட ரீதியில் நீதிக்கான தேடலை நீர்த்துப்போகச் செய்ய முற்படுகின்றதா அதற்கு தமிழ் அரசுக் கட்சியும் உடந்தையாகச் செயற்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

2009 ஆம் ஆண்டுப் போரின் போதான அழிவுகளை ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் இனப்படுகொலை என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தி அந்த இனப்படுகொலைக்கான நீதியைத் தேடுவதன் ஊடாக அரசியல் தீர்வைப் பெறுவதற்கு விரும்புகின்றன. சிறிலங்கா அரசு காலாதிகாலமாக தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைப் புரிந்து வந்தது. அது முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்றிருந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுவதன் ஊடாக எதிர்காலத்தில் சிறிலங்கா அரசால் தம் மீது இனப்படுகொலையை நிகழ்த்த முடியாதளவுக்கு உறுதியான அரசியல் தீர்வை எட்டலாம் என்று தமிழ்மக்கள் நம்புகின்றார்கள். ஆனால் சம்பந்தன் - சுமந்திரன் இணையைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து நீதியை நிலைநாட்டும் விடயத்தில் விட்டேத்தியாகவே செயற்படுகின்றனர். தென்னிலங்கைத் தலைவர்களையும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட இலங்கை விவகாரத்தில் தலையிடும் தூதரகங்களையும் திருப்திப்படுத்தும் விதத்திலேயே நீதிப்பொறிமுறையை இதுவரை கையாண்டிருக்கின்றனர். அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன. இப்போதும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களின்' நீதிக்கான கோரிக்கையைப் புறந்தள்ளி தனித்து அரசியல் தீர்வுக்கான நிலைப்பாட்டை மாத்திரம் முன்வைப்பது என்பது பிற்போக்குத்தனமானது?

அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிங்களத் தலைவர்களிடம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு தமிழ் மக்கள் கோரும் பன்னாட்டு விசாரணையை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தால் அவர்கள் எவரும் ஏற்கமாட்டார்கள். அப்படியொரு நிலைமை வந்த பின்னர் எப்படி அவர்களை ஆதரிக்க முடியும்? தமிழ்ப் பொதுவேட்பாளரைத்தான் ஆதரித்தேயாக வேண்டிவரும். இதனால் தான் சம்பந்தன் சுமந்திரன் இணை நாசூக்காக நீதிக்கான பயணத்தை தவிர்த்திருக்கின்றது. தமிழ் அரசுக் கட்சியினராவது இவற்றைப் புரிந்துகொண்டு சமயோசிதமாக முடிவு எடுக்கவேண்டும்.

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

345 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.