ரணில் முன்பாக சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு!
(ஆதவன்)
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசதலைவர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தமையை இப்போதாவது வருத்தத்துடன் நினைவுகூர்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்பாகத் தெரிவித்தார்.
யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவபீடத்துக்கான கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று அவர் மேலும் தெரிவித்ததாக அரசதலைவர் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் சுமந்திரன் இவ்வாறு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அரசதலைவர் ரணில் இன்று இங்கு வந்ததற்குத் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன். அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். இன்று (நேற்று) திறந்து வைக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவபீடக் கட்டடம் வடக்குக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் ஒரு நல்ல முதலீடாகும் எனச் சுட்டிக்காட்டலாம்.
மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாகமாறும் என நான் நம்புகிறேன். முன்னதாக இச்சபையில் உரையாற்றியவர்கள் கூறியதுபோல் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் அரசதலைவர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
2005 இல் உங்கள் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வடபகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கிறேன்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தை நான் வாழ்த்துகிறேன். இந்த முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த அரசதலைவரை அன்புடன் வரவேற்பதுடன், இந்தப் பயணத்தின்போது வடக்குக்கு அவர் ஆற்றிவரும் அனைத்துப் பணிகளையும் பாராட்டுகின்றோம், என்று சுமந்திரன் உரையாற்றினார், என அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.