யாழ்ப்பாணத்திலிருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவுகளுக்கான கடல் போக்குவரத்து மோசமான காலநிலையால் தடைப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக 'வளிமண்டலவியல் பணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று காலை 5.30 மணியளவில் 15 பாகை வடக்கு நோக்கியும் 88.4 பாகை கிழக்குக்கு அருகில் மையம் கொண்டுள்ளதுடன் இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து கிழக்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு சூறாவளிப் புயலாக குவிய வாய்ப்புள்ளதுடன் அதன்பிறகு, அது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக அதே பகுதியில் தீவிரமடையும்.
இந்த வேளைகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை வீசுவதுடன் கடலும் கொந்தளிப்பாகக் காணப்படும், என எதிர்வு கூறப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவுகளுக்கான கடல் போக்குவரத்துக்கள் இடம்பெறாது.
நயினாதீவுக்கான படகு சேவைகள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் ' என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.