(புதியவன்)
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோவிலடி 7ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவமானது கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 23 ஆம் திகதி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அன்றையதினம் வாள் கத்தி இரும்பு கம்பிகளுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட நபர்கள் வந்ததாகவும் வந்தவர்கள் கடும் போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டதோடு பொலிஸார் இவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
இப்பகுதி மக்கள் ஏற்கனவே வாள்வெட்டு நபர்களுக்கு எதிராக கையெழுத்திட்டு உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.