ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நால்வரும் இந்தியாவில் நாசகாரச் செயல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் எனவும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடனேயே இந்தியாவுக்கு வந்தனர் என்றும் குஜராத் பொலிஸார் கூறினர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் இடையே தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தும் காணொலிப் பதிவுகள் சிக்கியிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் தேர்தல் மேகம் சூழ்ந்துள்ள தருணத்தில் இந்தக் கைதுகள் பலவிதமான சந்தேகங்களையும் கிளறத் தவறவில்லை.
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் மூலதனம் முற்றுமுழுதாக சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையே மையமாகக் கொண்டது. குறிப்பாக முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்குதல், அவர்களின் மதத்தலங்களை இடித்தல், பயங்கரவாத முத்திரை குத்தி முஸ்லிம்களை சிறைக்குள் அடைத்தல், கலவரங்களை உருவாக்குதல் என்பன தான் பாரதிய ஜனதாக் கட்சியின் அரசியல் பாலபாடங்கள். ஏறக்குறைய இதே அணுகுமுறையைத்தான் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாதமும் கைக்கொண்டது. ஆனால் இங்கே முஸ்லிம்களுக்குப் பதிலாக ஆரம்பத்தில் தமிழ் மக்களையே இவ்வாறு பயங்கரவாதத்தின் பெயரால் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் வேலைகளை சிங்கள பௌத்தப் பேரினவாதம் மேற்கொண்டது. வேடிக்கை என்னவென்றால், தாமும் ஒரு சிறுபான்மையினர் என்பதை மறந்துவிட்டு பெரும்பாலான முஸ்லிம்கள், இவ்வாறு தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை ஆதரித்ததுதான். ஆனால் காலச்சக்கரத்தின் சுழற்சி மாறியது. இனிமேல் தமிழர்களை அழிப்பதன் மூலம் தங்கள் வாக்குவங்கியைப் பேண முடியாது என்று தெரிந்தவுடன், முஸ்லிம்கள் பக்கம் திரும்பியது பேரினத்தின் பார்வை. ஈஸ்டர் தாக்குதல் முஸ்லிம்கள் மீதான அத்தனை வன்மங்களையும் தீர்ப்பதற்கான திறவுகோலானது. முஸ்லிம்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை மூலதனமாகக் கொண்டே ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தனர்.
'அரகலய' போராட்டத்தால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டு பதவிகளை விட்டு ஓடினர். அவர்களின் கட்சி இப்போதும் ஆட்சியில் இருந்தாலும், இனிமேல் மக்கள் அந்தக் கட்சிக்கு முன்னரைப் போல பெருவாரியாக வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகமே. ஏறக்குறைய இந்தியாவிலும் பாரதிய ஜனதாக் கட்சியின் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையை அரசியல் மூலதனமாக்கும் உத்தியும் காலாவதியாகத் தொடங்கிவிட்டது. இப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறையை விடவும் மோடி அரசின் செல்வாக்கு மக்களிடத்தே சரிந்துவிட்டதாக கருத்துக் கணிப்புகள் கட்டியம் கூறுகின்றன. பாரதிய ஜனதாக் கட்சி அடுத்த கட்டத் தேர்தல்களில் கொஞ்சம் அசந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் சாத்தியங்களும் தென்படுகின்றன. எனவேதான் முஸ்லிம் பயங்கரவாதம்' என்ற புழுதி படிந்துபோன கோஷத்தை தூசு தட்டி, அதற்கு இன்னும் வலுச்சேர்த்து, மக்கள் மனங்களை மடைமாற்றி, வாக்குகளை தம் பக்கம் இழுக்க வேண்டிய தேவை இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள ஆளும் கட்சிகளுக்கு ஏககாலத்தில் எழுந்திருக்கின்றன. அதற்காக அவை எந்த நாடகத்தை நடத்தவும் தயார். ஒருவேளை குஜராத்தில் நடந்த கைதும் கூட இந்த நாடகத்தின் ஓரங்கமாக இருக்கலாம். ஏனெனில் அப்பாவிகளுக்கு எப்படியெல்லாம் 'பயங்கரவாதச் சாயம் பூசிக் கொன்றொழிப்பார்கள் என்பதை கண்முன்னே காலங்காலமாக கண்டுணர்ந்தவர்களல்லவா நாம்?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.