21 வருடங்களின் பின்னர் ரணில் கூறிய தகவல்..
(ஆதவன்)
வன்னியை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது இந்தப் பகுதிக்கு விவசாய உரங்களை அனுப்புவதற்கு நாம் பயந்தோம். ஏனெனில் அதைப்
பயன்படுத்தி புலிகள் ஆயுதங்களை தயாரிப்பார்கள் என நாம் அச்சமடைந்தோம் என அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் உறுமய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி நேற்று முற்பகல் இரணைமடு நெலும் பியச மண்டபத்தில் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய ஆயிரத்து 700 முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதுடன், அடையாள ரீதியாக சில உறுதிப்பத்திரங்கள் அரசதலைவரால் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க,
கிளிநொச்சி நகரம் துரிதமாக வளர்ந்து வருகிறது. இந்த உறுதிகளை வழங்க முன்னர் மாகாண ஆளுநர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டோம்.
வெள்ளையர்கள் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் இந்தக் காணிகள் வழங்கப்படுகின்றன. வெள்ளையர்கள் இந்தக் காணிகளைப் பாதுகாத்தனர். நீங்களும் இந்தக் காணிகளைப் பாதுக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நாடாளுமன்றக் குழுவுக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன். உண்மையில் இந்தக் காணி உரிமைகள் மக்களுக்கு கிடைக்கவேண்டும். எமது விவசாயிகள் அரிசியில் தன்னிறைவு அடைந்த நாட்டை உருவாக்கியுள்ளார்கள்.
2003 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது அரிசியில் தன்னிறைவு அடைந்தோம். அதற்கு முன்னர் இந்த நிலைமை இருக்கவில்லை. அப்போது வன்னிப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் உரம் அனுப்புவது குறித்து ஆராய்ந்தோம். உரத்தைப் பயன்படுத்தி புலிகள் ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடும் என்ற அச்சம் இருந்தது. இதுகுறித்து உயர் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் வன்னிப் பிரதேசத்துக்கு உரத்தை வழங்கினோம்.
2003 ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றது. அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததில் வன்னி, அநுராதபுரம், பொலன்நறுவ மாவட்டங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. தற்போது சிலருக்குக் காணி உரிமை கிடைத்துள்ளது. விவசாயக் காணி உரிமை கிடைக்கிறது. நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதனைப் பயன்படுத்தி, போட்டித்தன்மை மிக்க விவசாயத்துறையை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதன்மூலம் விவசாயத்துறை வளர்ச்சி பெறும். உலக சனத்தொகையும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் அதிகரித்து வரும் சனத் தொகைக்கு எங்களுக்கு உணவளிக்க முடியும்.
தற்போது நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தில் வன்னிக்கு மிகப்பெரிய வகிபாகம் இருக்கிறது. உங்களின் காணிகளை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். போரால்காணிகளை இழந்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். தற்போது கிடைக்கும் காணிகளை இழந்து விடக்கூடாது. நீங்கள் இந்தக் காணிகளில் விவசாயம் செய்து. வீடுகளைக்கட்டி அவற்றை உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குங்கள். இந்தப் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதனை நீங்கள் செய்யவேண்டும்-என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.