வவுனியா மாவட்ட மருத்துவமனையை போதனா மருத்துவமனையாக மாற்றியமைப்பதுடன், வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 4 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் ஆதார மருத்துவமனையின் மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பனவற்றை அரச தலைவர் ரணில் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு அவர் உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் போது யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீடத்துக்கு புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் 4 சுகாதார பிரிவுகளை ஆரம்பிக்கவும் இணக்கம் காணப்பட்டது. கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக 4 வருடங்களாக இப்பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்து மருத்துவமனைகளை திறந்து வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தேன். அத்துடன் கடந்த மார்ச் மாதம் பருத்தித்துறையில் புதிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் சுகாதாரப் பிரிவு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று வவுனியா மற்றும் மாங்குளம் சுகாதார பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வடமாகாணத்துக்கு சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு கிடைக்கிறது.
அத்துடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரமுயர்த்துவதற்கு அண்மையில் தீர்மானித்தோம்.
அத்துடன் வவுனியா மருத்துவமனையை பிரதான மருத்துவமனையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு ஆளுநருக்கும் மாகாண தலைமைச் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன். அதன் பின்னர் அதனை போதனா மருத்துவமனையாக மாற்றி வவுனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்க முடியும், என்று குறிப்பிட்டார். (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.