ரணிலின் பேச்சுக்கு
தமிழ்த் தலைவர்கள் பதிலடி!
(ஆதவன்)
இனத்தின் விடுதலைக்காக ஒரே நிலைப்பாட்டில் நாம் தீர்மானத்தை எடுப்போம் என தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களால் ஒற்றுமையாக தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளமை தொடர்பில் தமிழ்த் தலைவர்களிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் நாம் அனைவரும் இன்னமும் ஒன்று கூடிப் பேசவில்லை. நாம் விரைவில் கூடிப்பேசித் தீர்மானிப்போம். ரணில் அப்படித் தெரிவிக்கமுடியாது. இனத்தின் விடுதலைக்காக ஒரே நிலைப்பாட்டில் நாம் தீர்மானத்தை எடுப்போம். நீதிமன்ற வழக்குகளின் திகதிகளின் நிமித்தம் எம்மால் கூட முடியாதுள்ளது. இருப்பினும் வெகுவிரைவில் தீர்மானத்தை நாம் எடுப்போம் - என்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் தயாரில்லை. சிங்களத் தலைவர்கள் ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பயன்படுத்த நினைக்கும் மனோ நிலையிலிருந்து வெளிவராத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றுக்கு சாத்தியமேயில்லை - என்றார்.
ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரணில் விக்கிரமசிங்க, விக்னேஸ்வரனிடம் கூறிய கருத்து எம்மைத் தலைகுனிய வைக்கின்ற பேச்சாகக் கருதுகின்றேன். எங்களுடைய பலவீனத்தை இது எடுத்து காட்டுகின்றது. நாம் ஒற்றுமையாக நிற்பதற்கான செயற்பாடுகளைச் செய்தே தீரவேண்டும். ஒற்றுமையில்லாமல் நாம் இருப்பதனால் எம்மை மலினப்படுத்துகின்றார். தென்னிலங்கை எப்பொழுதும் பிரித்தாளும் தந்திரத்தையே கையாளுகின்றது. இதனாலேயே இவ்வாறான கருத்து வருகின்றது. எங்களைப் பொறுத்தவரை எமக்கு இது சவாலான விடயம். இதனை நாம் ஒற்றுமையாக நின்று செய்துகாட்டுவோம்-என்றார்.
புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன். தமிழ் மக்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை என்பது மிக நீண்டகாலமாக இருக்கின்ற ஒரு பிரச்சினை. தமிழ் மக்களிடையே ஒரு பிரச்சினை. தமிழ் மக்களிடையே ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் நாங்கள் வெற்றியடைவோம். இது அனைத்துக்கும் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையைக் கதைத்துவிட்டு இங்கு வந்து எம்மைப் பற்றி பேசட்டும். ஒற்றுமையில்லாமல் இருப்பது சாபக்கேடுதான். ஆனால் அரசதலைவ ரணில் விக்கிரமசிங்க அதனைக் கதைப்பதற்கு தகுதியற்றவர். முதலில் தனது உட்கட்சிப் பிரச்சினையை முடித்துவிட்டு இங்கே வரட்டும் - என்றார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், சஜித் பிரேமதாஸ, அநுர, ரணில் போன்ற தகுதி வாய்ந்த பலர் வேட்பாளராவதற்கு தமிழ் மக்களிடமும் தாராளமாக உள்ளார்கள். தமிழ் மக்களிடம் வேட்பாளர்கள் உள்ளார்களா என ரணில் கேட்டது தமிழ் மக்களை கேலிக்கு உள்ளாக்கும் செயலாகும் - என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ், ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தேவையாக இருப்பது தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதுதான். தமிழ் மக்களது வாக்குகள் இம்முறை தனக்குக் கிடைக்கப்போவதில்லை என ரணிலுக்குத் தெளிவாகத் தெரியும். தனக்குக் கிடைக்காத தமிழ் வாக்குகள் தனது போட்டியாளராக வரக்கூடிய சிங்கள வேட்பாளருக்கும் கிடைக்கக்கூடாது. எனவே தமிழ் மக்களைச் சீண்டும் வகையில், உங்களால் ஒற்றுமையாக பொது வேட்பாளரை நிறுத்தமுடியாது என்று சொல்வதன் ஊடாக தமிழ் மக்கள் நிச்சயம் பொதுவேட்பாளரை நிறுத்துவார்கள். அதுதான் ரணிலுக்குத் தேவை. இது ரணில் - விக்னேஸ்வரன் கூட்டு நாடகம் என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.