ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
(புதியவன்)
மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோவில் காட்டுப்பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்ட இடத்தில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.
இக் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 8 பேர் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து வருடி இயந்திரம் உள்ளடங்களாக புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
பொலிஸார் 8 பேரையும் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தில் அகழ்வு பணியை முன்னெடுக்க பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிவான் அனுமதி வழங்கினார். நீதவானின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.
இதில் மன்னார் பேசாலை பொலிஸார் மற்றும் உரிய பணிமனை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.எனினும் அகழ்வு நடவடிக்கைகளின் போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.
அகழ்வு பணியின் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி வழங்கவில்லை.
இதேவேளை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய 8 சந்தேக நபர்களையும் எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.