(செல்வன்)
வெள்ளத்தில் மூழ்கிய வசந்தபுரம் கிராமம். கிராம மக்கள் மீட்க்கப்பட்டு மன்னாகண்டல் பாடசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூள்கியுள்ளன. வசந்தபுரம், கெருடமடு, 3 ம் கண்டம் ஆகிய கிராமங்களை கொண்ட கிராம அலுவலர் பிரிவில் வசந்தபுரம் மற்றும் கெருடமடு கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் 3 ம் கண்டம் பகுதியிலும் சிலர் வெள்ளத்தில் மூள்கியுள்ளனர். முத்துஐயன்கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவில் திறக்கபட்டுள்ளதுடன் 2’ (2 அடி) வான் பாய்கிறது முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் (18.12.2023) அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அவர்களை கிராமத்தில் இருந்து மீட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவின் 135 குடும்பங்களை சேர்ந்த 408 பேரே இவ்வாறு மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.