புதியவன்
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை இராணுவச் சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு, செங்கல் தயாரிக்கும் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலை, போருக்குப் பின்னர் நீண்டகாலமாக இயங்காத நிலையில் உள்ளது.
இந்நிலையில், குறித்த தொழிற்சாலை எந்த நடவடிக்கையும் அற்ற நிலையில், மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் அரசியலுக்காக விரைவில் புனரமைப்பு செய்யப்படும், மூன்று மாதத்தில் இயங்கும், என பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். எனினும் எதுவும் செய்யப்படவில்லை.
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்கள் எவையும் செயற்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், கைவிடப்பட்டிருந்த தொழிற்சாலையை சிலோன் செராமிக்ஸ் கூட்டுத்தாபனத்தால் விடுக்கப்பட்ட சிறப்பு கோரிக்கைக்கு அமைய இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் 2024 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் புனரமைக்கும் திட்டத்தை இராணுவம் ஆரம்பித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும், அப்பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்தத் தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகின்றது என இராணுவத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே 27 ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு வருகை தந்ததுடன் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை பார்வையிட்டார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.