(புதியவன்)
வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர அதிகாரியின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து நேற்று (25) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர அதிகாரியின் கோவில்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுண் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளின் போது அவர்களது வீட்டில் இருந்த கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகளும் காணாமல் போயிருந்தமை தெரியவந்தது.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் கீழ் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பவுண் நகைகளும் மீட்டுள்ளதுடன், கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வீட்டில் நின்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தங்கியிருந்த அவர்களது உறவினர் ஆகியோர் பொலிஸாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நகைகள் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் உள்ளதுடன் அதனை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.