புதியவன்.
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கடவுச்சீட்டு காரியாலயம் முன்பு மோசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைய செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மூத்த பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை(24) அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக சோதனையில் ஈடுபட்டதுடன் மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மூத்த பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்கவினால் எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் 0718593520 என்ற தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.