மாதவன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும், அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக 12.05.2024 வரை தற்போது உள்ளதை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை விரிவுரையாளரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெப்ப அலைச் சுட்டெண்ணின் ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 30.04.2024 க்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இந்துக்களின் பஞ்சாங்கப்படி காண்டாவனம் அல்லது அக்கினி நாள்/ அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை முதல் 28.05.2024 செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடுகின்றது. கடந்த சில நாட்களாக இரவுப் பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது. எதிர்வரும் 27,28, 29 மற்றும் 30 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல. எனவே இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்பதுடன், நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுது பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.