(மாதவன்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கர்தினால் மல்க்கம் றஞ்சித் ஆண்டகை முன்வைத்த விடையங்களை மறுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்தினை பகிரும் போது மத தலைவர்கள் அரசியலில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் (27) இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1957 பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஒரு தலைப் பட்சமாக பண்டார நாயக்க ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தமைக்கு காரணம் பௌத்த மத தலைவர்களின் அரசியல் தலையீடு தான் அன்று பண்டா செல்வா ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இலங்கைத் தீவு அபிவிருத்தி அடைந்த நாடாகவும் இன ஐக்கியத்துடனும் மாறி இருக்கும் துரதிஸ்ட வசமாக பௌத்த பிக்குமார் அரசியலில் புகுந்து வளர்த்த இனவாத தீ முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி விட்டது.
அன்று தொடங்கிய இனவாதம் இன்றும் குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை வரை தொடர்வது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு தெரியாதா? புரியாதா? அல்லது பிக்குமார் அரசியலில் தலையிட்டால் தவறு இல்லையென எழுதப்படாத யாப்பு உண்டா? ஏனைய மத தலைவர்கள் நீதி நியாயம் கேட்டால் அரசியல் தலையீடா? மடியில் கனம் இல்லை என்றால் கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சுதந்திர விசாரணை மூலம் நீதியை பெற்றுக் கொடுத்திருக்க முடியுமே ஏன் நடக்கவில்லை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.