'யார் அதிக கடவுள் பக்தி உடையவர் ?"என்று இருவருக் கிடையே போட்டி வந்தது. ஒருவன் ஒரேயொரு கடவுளை மட்டுமே எப்போதும் வழிபடுபவன். மற்றவன் உலகில் உள்ள எல்லாக் கடவுளையும் பேதம் பாராமல் வழிபடுபவன். இதனால் யார் அதிக கடவுள் பக்தி உடையவன் என்று ஊரவர்களாலும் தீர் மானிக்கமுடியாமல் இருந்தது. இதற்கு எல்லாக் கடவுளர்களையும் வணங்குபவன் ஒரு வழி சொன்னான்.
'நாங்கள் இருவரும் மலை உச்சியில் இருந்து குதிப்போம். யாரைக் கடவுளர்கள் காப்பாற்றுகின்றனரோ, அவரே அதிக பக்தியுடையவர்' என்று அவன் சொன்ன யோசனைக்கு ஊரவர்களும் சம்மதித்தனர். திருவுளச் சீட்டின் மூலம் ஒரேயொரு கடவுளை வணங்குபவனே முதலில் மலையுச்சிக்குப் போகவேண்டும் என்று முடிவானது. அவனும் போனான். தன்னைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டு கீழே குதித்தான். அடுத்த நொடியே அவனது கடவுளின் கரம் அவனைத் தாங்கிப் பிடித்து, பத்திரமாக கீழே அவனைக் கொண்டு வந்து சேர்த்தது. அடுத்ததாக, பல கடவுள்களை வணங்குபவன் மலையில் இருந்து தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டே குதித்தான். 'உன்னில் தான் அவன் அதிக பக்தி அதனால் நீதான் அவனைக் காப்பாற்றவேண்டும்' என்று அவன் வணங்கிய இஷ்ட தெய்வங்கள் எல்லோரும் மாறி மாறிச் சண்டை பிடித்தபடி இருந்தார்கள். அதனால் எந்தக் கடவுளும் அவனைக் காப்பாற்றப் போகவில்லை. இறுதியில் அவன் கீழே விழுந்து செத்தே போனான். நம்பிக்கை என்பது ஓரிடத்தில் வைக்கப்படும் போதுதான் அதற்குரிய சக்தியைத் தருகின்றது. வெறுமனே பக்திக்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் இதுவே அடிப்படை ஆனால் அந்த நம்பிக்கையைப் பரவலாக்கும் போது உண்மையான நம்பிக்கையை யாரில் வைத்திருக்கிறோம் என்ற சந்தேகம் எமக்கே வந்துவிடக் கூடும். இலங்கை அரசாங்கமும் இப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது.
கடலில் தத்தளிப்பவன் கையில் அகப்படும் எல்லாவற்றையுமே தனக்கான மீட்புப்பொருளாக நினைத்துப் பற்றுவதைப் போல, உதவி செய்வதாக எந்த நாடு சொன்னாலும், அந்த நாட்டுக்கு செங்கம்பளம் விரித்து, வரவேற்று விருந்து வைப்பது இலங்கையின் இயல்பாகி விட்டது. அந்த நாடுகளை அரவணைப்பதால் மற்றைய நாடுகளின் பகையைச் சம்பாதிக்கவேண்டியிருக்கும், அந்தப் பகையால் இப்போதிருப்பதை விடவும் மோசமான நிலை உண்டாகலாம் என்பன பற்றியெல்லாம் இலங்கை கிஞ்சித்தும் கணக்கெடுப்பதாகவும் தெரியவில்லை. பேஸ்புக்கில் அதிகநபர் களை நண்பர்களாக வைத்திருப்பது தான் கௌரவம் எனச் சிலர் எண்ணுவதைப் போல, உலக அரசியலிலும் அதிக நட்பு நாடுகளைச் சம்பாதிப்பதே கெட்டித்தனமான இராஜதந்திரம் என இலங்கை நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய உலகமயமாதலில் அது எவ்வளவு ஆபத்தான காரியமென்பதை வெகுவிரைவிலேயே இலங்கை அனுபவம் மூலமும் உணரத்தான் போகின்றது. அமெ ரிக்கா, சீனா, இந்தியா,பாகிஸ்தான், இஸ்ரேல் பலஸ்தீனம் என்று தமக்குள்ளே கீரியும் பாம்புமாக பகைமை பாராட்டும்நாடுகளுடன் எல்லாம் இலங்கை தோளில் கைபோட்டு, அவர்களின் 'பொக்கற் றுக்குள் இருந்து கொஞ்ச உதவிகளையும் உரிமையோடு கேட்டுப் பெற்றிருந்தது. அந்தநாடுகளும், இப்படிச் சில்லறைகளை விசிறி விட்டு, எங்கள் வளங்களை எல்லாம் கூறுபோட்டு தமக்குரியனவாக்கிக் கொண்டன.
இந்த நட்புக்களத்தில் இப்போது ஈரானையும் இறக்கி விட்டி ருக்கிறது இலங்கை. இதுதான் பெரும் தலைவலியை இலங்கைக்கு கொண்டுவரப்போகின்றது. அமெரிக்காவின் வல்லாதிக்கக் கனவுக்கு முட்டுக்கட்டையாக, அணுவாயுதத்திறனோடு இருக்கும் நாடுகளில் ஈரான் முக்கியமானது. எனவே ஈரானின் மீது போர் தொடுக்கும் சந்தர்ப்பத்தை அமெரிக்கா எதிர்பார்த்துக் காத்தி ருந்தது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேல், சிரியா விலுள்ள ஈரானியத் தூதரகத்தை ஏவுகணையால் தாக்கி,இராணுவ உயர்நிலைத் தளபதிகளை கொன்றழித்துச் சீண்டியது. இந்தச் சீண்டலுக்கு ஈரான் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுக்க, இது தான் சந்தர்ப்பம் என்று களத்துக்குள் புகுந்துள்ள அமெரிக்கா, ‘ஈரானோடு உறவுபாராட்டும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என்ற தனது வழக்கமான மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளிவரும் சந்தர்ப்பத்தில் தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கையில் காலடி எடுத்து வைத்திருந்தார். எனவே தன் அறிவிப்பையும் மீறி, இலங்கை அரசாங்கம் ஈரானை அரவணைத் ததை அமெரிக்கா சகித்துக்கொண்டிருக்கப் போவதில்லை.
இலங்கையைப் பழிவாங்கும் நேரடி, மறைமுக நடவடிக்கைகள் அனைத்தையும் அது செய்தே தீரும். அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சீனாவின் ஆதரவுடன் தப்பிக்கொள்ளலாம் என இலங்கை நினைத்தால் அதைவிட மடத்தனம் வேறில்லை. என்னதான் அமெரிக்காவுடன் ஜென்மப் பகை இருந்தாலும், ஈரான் விடயத்தில் அமெரிக்காவுக்கு எதிர்நிலையை சீனா ஒரு போதும் எடுக்காது, இந்தியாவும் அவ்வாறேதான். எனவே ஈரானை அணைக்கப் போய், தன்னைச் சுற்றி நின்ற அத்தனை நட்பு நாடுகளும் தூரப்போகும் நிலையை ஏற்படுத்தி, அவற்றின் உதவித் திட்டங்களுக்கும் இலங்கை ஆப்பு வைத்திருக்கிறது. ஈரான் அதிபரை இலங்கைக்குள் கால்வைக்க அனுமதித்தமைக்கான விலையை இலங்கை கொடுக்கும் போது, அதன் விளைவுகள் மிகப்பாரதூரமானதாகவே இருக்கும். ஆனால் விளைவுகளின் வலியை அனுபவிக்கப்போவது அரசாங்கமோ அரசியல்வாதிகளோ அல்ல, மாறாக அப்பாவி மக்களே....
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.