போட்டுக்குடுக்கிறது, காட்டிக்குடுக்கிறது எண்டால் எங்கட சனத்துக்குத் தனிக்கலை. சாப்பாடு, தண்ணி இல்லாமல் கூட இருந்திடுவினம். ஆனால் இப்பிடி அடுத்தவையைப் போட்டுக்குடுக்காமலோ, அவை செய்யிற வேலையளைக் காட்டிக்குடுக்காமலோ இருக்கமாட்டினம். இது சாதாரண ஆக்களில இருந்து அதிகாரியள் வரைக்கும் ஒரு தொற்றுநோயா இன்னும் மாறாமல் இருக்கு.
இப்ப விசயத்துக்கு வருவம். இப்ப பள்ளிக்கூடங்களில விளையாட்டுப்போட்டியள் நடந்தது. வெக்கை எண்டதால சித்திரை வருசப்பிறப்புக்குப் பிறகுதான் விளையாட்டுப் போட்டியளை நடத்தச் சொல்லி ஓர்டர் வந்திட்டது. அதால இனிச் சித்திரைக்குப் பிறகுதான் மிச்சப் பள்ளிக்கூடங்கள் விளையாட்டுப் போட்டியளை வைக்கலாம். இது வரைக்கும் வடக்கில நடந்த விளையாட்டுப் போட்டியளில, சில விசயங்கள் எல்லாரின்ர கண்ணையும் ஒருக்கா திரும்பிப் பாக்க வைச்சது. வெடுக்குநாறிமலை, பஸ் அக்சிடெண்ட்டாங்கி. மாவீரர் துயிலு மில்லம், சிவபெருமானைப் பிடிச்சு இழுக்கிற பிக்கு எண்டு இப்பத்தைச் சூழ்நிலையைச் சொல்றமாதிரி சிலபள்ளிக்கூடங்களில இல்லங்களை அலங்கரிச்சதும், விநோத உடைப்போட்டிக்கு வேசம் போட்டதும் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அதோட இப்ப இருக்கிற இறுக்கமான நிலையில எங்களுக்கு கிடைச்ச ஒரு வழியைப் பாவிச்சு. எங்கட பிரச்சினையை வெளிப்படுத்தின துணிச்சலையும், கற்பனைச் சக்தியையும் கனபேர் பாராட்டினவை. ஆனால் அதுக்கும் இப்ப ஆப்பு வைச்சிருக்கினம் அதிகாரிமார்.
மூண்டு நாளுக்கு முதல் ஒரு சூம் மீட்டிங் நடந்திருக்குது. வடக்கு மாகாணக் கல்விக்குப் பொறுப்பான அதிகாரிதான் இந்த சூம் மீட்டிங்குக்கு ஏற்பாடு. அதில பள்ளிக்கூட அதிபர்மாரும், கல்வித் திணைக்கள அதிகாரிமாரும் கலந்துகொண்டவை. இப்பிடி பள்ளிக்கூடத்தில வெடுக்குநாறிமலை விசயங்கள். சீ.ரி.பி.க்காரரை அவமானப்படுத்திற விசயங்கள் எல்லாம் விநோத உடைப்போட்டி, இல்லங்களைச் சோடிக்கிறதில காட்டுப்பட்டிருக்கு. இதால எங்களுக்கு மேலிடத்தில இருந்து கடும் பிரஷர். இப்பிடியெல்லாம் இனிமேல் எந்தப் பள்ளிக்கூடத்திலையும் அரசியல் கருத்துப்பட சோடிக்கக்கூடாது. அதோட வெளிநாட்டில இருந்து. ரூரிஸ்ட் விசாவில இலங்கைக்கு வாற ஆக்களை விருந்தினராகவும் கூப்பிடக்கூடாது. ஆரெல்லாம் விருந்தினராவருகினம், விநோத உடைப்போட்டியில ஆர் என்ன வேசம் போடப்போகினம், இல்லங்களை எப்பிடிச் சோடிக்கப் போறீங்கள் எண்டதுகளை முதலே எங்களுக்கு அறிவிச்சு, அனுமதி எடுக்க வேணும். அப்பிடி அனுமதி எடுக்காமல் செய்தால் அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கோணுமோ அதை உடன எடுப்பம். எண்டு வடக்குக் கல்விக்குப் பொறுப்பா இருக்கிறவர் வாய்மொழி 'ஓர்டர்கள்' போட்டிருக்கிறாராம். கிட்டத்தட்ட இது ஒரு தணிக்கைதான். இனிமேல் எங்கட இனத்தின்ர அடையாளங்களை விளையாட்டுப்போட்டியளில காணேலாதபடிதான் இப்பிடியான வேலையைச் செய்திருக்கினம். சிங்களவங்கள் எங்களை வைச்சு செய்யிறாங்களோ இல்லையோ, எங்கட அதிகாரிமார் எங்கட இனத்தை நல்லா வைச்சு செய்யினம் பாருங்கோ....
(21.03.2024- உதயன் பத்திரிகை)
b8ugh9
mn9yfy
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.