பட்சி சொன்ன சில விசயங்களுக்கு வந்த எதிர்வினையள் பற்றி இண்டைக்குப் பார்க்க வேண்டியிருக்கு.
பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியளில் ஆரை விருந்தினராக் கூப்பிடுகினம், விநோத உடைக்கு என்னென்ன வேசம் போடுகினம் எண்டெல்லாம் தங்களிட்ட பெர்மிசன் எடுக்கோணும் எண்டு வடக்கின்ர கல்விக்குப் பொறுப்பானவை வாய்மொழி உத்தரவு போட்டதை பட்சி சொன்னதெல்லோ.அதை வாசிச்சிப் போட்டு கல்வித்திணைக்களத் தரப்புகள் தங்கட பக்க நியாயத்தை சொன்னவை.
கூட்டம் நடந்தது உண்மை தான். ஆனால் தமிழீழம் மாதிரி உருவங்களில இல்லங்களைச் சோடிச்சாலோ. சிவபெருமானைப் பிக்கு பிடிச்சு இழுத்துக்கொண்டு வாறமாதிரி விநோத உடைப்போட்டியில வேசம் போட்டாலோ அது இன நல்லிணக்கத்தைக் குழப்புது எண்டு ஆரும் வரக்கூடும். அப்பிடிப் பிரச்சினை வந்தால் அது பள்ளிக்கூடத்துக்குத்தான் பாதிப்பு, அதாலதான் அதுகளை இயன்றளவு தவிர்க்கச் சொன்னனாங்கள். மற்றும்படி எங்களிட்ட பெர்மிசன் எடுத்துத் தான் உதுகளைச் செய்யோணும் எண்டு ஓர்டர் போடேலை.
பட்சியில சொன்னமாதிரி அதில அதிபர்மார் கலந்துகொள்ளேலை. வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்குத் தான் அந்தக் கூட்டத்தை வைச்சனாங்கள். ரூரிஸ்ட் விசாவில வெளிநாட்டில இருந்து வந்தவைய விருந்தினராகக் கூப்பிடேக்க, தமிழீழம் மாதிரி வடிவமைப்புகளைச் செய்தால் அது அவைக்கும் சிக்கலாப்போடும். அதால அவையை விருந்தினராக் கூப்பிடேக்க பார்த்துச் செய்யுங்கோ எண்டுதான் அட்வைஸ் சொன்னம்.
இதுதான் அவை சொன்ன விளக்கத்தின்ர சுருக்கம். சரி, இப்படி ஒரு நல்ல நோக்கத்தோட அப்பிடி ஓர்டர் போட்டிருந்தால் அதை வரவேற்கத்தான் வேணும். ஆனால் நல்லதைச் சொல்லுறம் எண்ட பாவனையில, எங்கட தேசியச் சிந்தனையளைக் குழப்பிற வேலையளைக் காட்டினால் அது கொஞ்ச நாளில வெளிச்சத்துக்கு வந்திடும்.
கொஞ்ச நாளைக்கு முதல் பட்சிக்கு ஒரு கோல்.
மானிப்பாய் பனை தென்னை வளச் சங்கத் தலைவர் கதைக்கிறன் எண்டு சொல்ல, சொல்லுங்கோ எண்டு கேக்கத் தொடங்கினம்.
பட்சியில மானிப்பாய் பனை தென்னை வளச் சங்கத் தவறணையில ஸ்ரிக்கர் எடுத்த செய்தி வந்ததெல்லோ. அதை எப்பிடி எங்களைக் கேக்காமல் போடமுடியும்? எண்டு ஆள் ஒற்றைப்பிடியா நிண்டார். உங்கட சங்கத்தை குறை சொல்லியோ, குற்றம் சாட்டியோ, பிழையாவோ ஒரு சொல்லுக்கூட இல்லையே. கலால் திணைக்களக்காரர் தான் இந்தச் சிக்கலுக்கு காரணம் எண்டமாதிரித்தானே போட்டிருக்கு என்று பட்சி சொல்லிமுடிக்க.
அது தெரியாது. ஆனால் எங்கட சங்கத்தின்ர பேரைப் போடுறதெண்டால் என்னைக் கேக்கவேணும். என் அனுமதி பெறவேணும். இஞ்ச எத்தினை பேர் எவ்வளவு கள்ளவேலை செய்யிறாங்கள். அவங்களைப் பிடிக்கக் காணேலை, இதை ஏன் போட்டனியள்? வந்தன் எண்டா எல்லாரையும் வெட்டுவன் எண்டு சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி ஆள் கண்டபடி குரைக்கத் தொடங்கிட்டார். பாவம் அவர் கதைச்சதெல்லாம் ரெக்கோர்ட் பண்ணிக்கொண்டிருக்கிற விசயத்தைச் சொன்னதும் பயத்தில பட்டெண்டு ஆள் போனை வைச்சிட்டது.
இப்பிடி பயமுள்ளவர் என்னத்துக்கு இப்பிடி போத்திலுக்க விட்ட பழங்கள்ளு மாதிரி பொங்கவேணும்? அதைவிட கலால்காரரிலதான் பிழையெண்டு பட்சி சொல்லி நாலைஞ்சு நாளைக்குப் பிறகு அதைப்பற்றி குற்றமே சாட் டுப்படாத மானிப்பாய் பனை தென்னை வளச் சங்கத் தலைவர் ஏன் விலை குடுத்து வில்லங்கத்தை வாங்கிறன் எண்டு நிக்கிறார் எண்டு விளங்கேலை. ஒருவேளை ஸ்ரிக்கர் மோசடியில கலால் காரரோட இவருக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ? குற்றமில்லாட்டி நெஞ்சு குறுகுறுக்காதே.
(23.03.2024- உதயன் பத்திரிகை)
x4fqnp
6g5exu
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.