புதியவன்
ஐ.பி.எல் - 2024 கிரிக்கெட் போட்டித் தொடரில் 6 ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 19.2 பந்துப்பரிமாற்றங்களில் இலக்கை கடந்து 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யாஷ் தயாள் 4 பந்துப்பரிமாற்றங்களில் 23 ஓட்டங்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், யாரோ ஒருவரின் குப்பை யாரோ ஒருவருக்கு புதையலாகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான முரளி கார்த்திக் வர்ணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் குஜராத்துக்காக விளையாடிய யாஷ் தயாள் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிடம் கடைசி பந்துப்பரிமாற்றத்தில் 5 ஆறு ஓட்டங்களைக் கொடுத்து தோல்விக்குக் காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே யாஷ் தயாள் நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்தே கழற்றி விடப்பட்டார். அவரை தற்போது பெங்களூரு வாங்கியுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளரான முரளி கார்த்திக் தெரிவித்ததாவது:
குஜராத் அணியில் குப்பையைப் போல் செயல்பட்ட யாஷ் தயாள் பெங்களூரு அணியில் புதையலை போல் செயல்படுவதாக வர்ணித்தார். இவ்வாறு, வர்ணித்த முரளி கார்த்திகை தற்போது இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவுக்காக நீங்கள் எந்தளவுக்கு புதையலை போல் செயல்பட்டீர்கள்? என்றும் யுவராஜ் சிங்கிடம் ஒரு பந்துப்பரிமாற்றத்தில் 6 ஆறு ஓட்டங்களைக் கொடுத்தாலும் இறுதியில் 600 டெஸ்ட் விக்கெட்டுக்களை ஸ்டுவர்ட் பிராட் எடுத்தவர். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்றும் இரசிகர்கள் முரளி கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு இளம் வீரரை குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தி பேசிய முரளி கார்த்திக் ஒன்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் இரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.(க)
m25d44
pdpjx9
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.