புதியவன்
வவுனியா - ஓமந்தையில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழந்தார்.
முல்லைத்தீவிலிருந்து கடமை முடிந்து வவுனியா நோக்கிப் பயணித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வாகனம் வவுனியா - ஓமந்தை கள்ளிக்குளம் சந்தியைக் கடந்து பயணித்த போது எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, கனரக வாகனத்துக்கு முன்பு அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியும் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
விபத்தில் பணிப்பாளர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன், அதனைச் செலுத்திச் சென்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளரும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் கு.அகிலேந்திரன் உயிரிழந்தார்.
இதேவேளை, கனரக வாகனத்தின் சாரதி ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.