இற்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றைய காலைப்பொழுதை தசைத் துண்டுகளும் குருதிச் சகதியுமாகத்தான் இலங்கைத்தீவு எதிர்கொள்ள நேரிட்டது. 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்' என்று உலக வரலாற்றில் அறியப்படும் அந்தத் தாக்குதல்கள் இலங்கையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் கிலிகொள்ள வைத்தன. உலகப் பயங்கரவாத அமைப்பான 'ஐ.எஸ்.ஐ.எஸ்.' (ஈராக், சிரிய இஸ்லாமிக் ஸ்ரேட்) அமைப்பின், அப்போதைய தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி, தாக்குதலுக்குத் தாமே பொறுப்பு என்று அறிவித்ததையடுத்து, உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் உலகப் பொதுப்பிரச்சினையாக' மாற்றம் பெற்றன, அவ்வாறே பார்க்கப்பட்டன. அமெரிக்க அதிபர் முதல் ஆபிரிக்கத் தலைவர்கள் வரையில் அனைவரும் ஓரணியில் நின்று இந்தத் தாக்குதல்களை எதிர்த்தனர், கண்டித்தனர்.
ஆனால், ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இலங்கை அரசாங்கத்தால் அதற்கேயுரித்தான கனதித் தன்மையுடன் கையாளப்பட்டதா? குருதிச் சகதிக்குள் கொன்று புதைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிருக்கு நீதி கொடுக்கப்பட்டதா? என்றால், அதற்குரிய பதில்கள் பல்லிழிக்கும். சரியான வகையில், வெளிப்படையான மக்களாட்சி நடைபெறும் நாடென்றால், தாக்குதலின் பின்னணி தொடர்பான அத்தனை விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டு, மக்களின் உளக்காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட்டு, இழப்பீடுகள் உரிய முறையில் வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்திருக்கும். ஆனால், இலங்கையில் நடப்பதென்ன? உயிர்த்தஞாயிறு தாக்குதலில் காவு கொள்ளப்பட்ட உயிர்ப்பலிகள் இன்று முற்றுமுழுதான அரசியலாக மாற்றப்பட்டுள்ளது என்றால் அதை மறுக்க முடியுமா?
நீதி மறுக்கப்படுவது ஒருபுறம் இருக்கையில், நீதியைத் தேடித்தேடி நொந்து - நலிந்து போனவர்களை மேலும் மேலும் துன்பப்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தெரிவிப்பதில் கைதேர்ந்தவர்களாகத் தான் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். இதன் ஆகப்பிந்திய வரவாக, 'உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் சூத்திரதாரிகள் மற்றும் தாக்குதல் பின்னணி என அனைத்தும் எனக்குத் தெரியும். நீதிமன்றம் பாதுகாப்பும் உத்தரவாதமும் வழங்கும் பட்சத்தில் சாட்சியம் வழங்கத் தயாராக இருக்கின்றேன்' என்று தெரிவித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சாட்சியத்தையும் பதிவுசெய்திருந்தார் மைத்திரிபால சிறிசேன. தாம் ஆட்சியமைத்தால், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொணரப்படும் என்று அறிவித்திருக்கின்றார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித். ஆக, இந்த விடயம் நீதிக்கான ஆரம்பப் புள்ளியைக்கூட எட்டவில்லை என்பதே இதிலிருந்து புலனாகின்றதல்லவா?
கொழும்புக்கும் பொறுப்புக்கூறலுக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. ஈழத்தமிழர்கள் இதை நன்கறிவார்கள். தற்போது சிங்கள மக்களும் பொறுப்புக்கூறாமை, காயங்களுக்கு மருந்திடாமை, மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்தாமை என்பவற்றின் வலியை உயிர்த்தஞாயிறுத் தாக்குதல் விடயத்தில் அனுபவிக்கத் தலைப்பட்டுள்ளனர். தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். நீதி எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாகின்றதோ அது அவ்வளவுக்கவ்வளவு குற்றவாளி தப்பித்துச் செல்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கவே செய்கின்றது. ஆதலால், உயிர்த்தஞாயிறு தாக்குதலாக இருந்தாலும் சரி, போர்க்குற்றங்களாக இருந்தாலும் சரி, 'காயங்களும் வலியும் பொதுவானதே' என்ற புரிதலுடன் நீதியைத் தேடவேண்டிய கடப்பாடு தமிழ் - சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இருக்கவே செய்கின்றது. அந்தப் புரிதலும், இணக்கமும் அதற்கூடான சகோதரத்துவமும் எவ்வளவுக்கெவ்வளவு வலுப்படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு நீதியின் கதவுகள் அகலத்திறக்கும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.