இலங்கை வலியுறுத்திய நிலைப்பாடு ஒன்றுக்காக, ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கின்றது என்றால், அதை நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ஜனாதிபதி ரணில், மீண்டும் மீண்டும் வலியுறுத்திய சித்தாந்தங்களும் தீர்வுத் திட்டங்களும்தான் ஐ.நா.வில் இன்றைய அரசியலும், பேசுபொருளும், விவாதப் புள்ளியும், எல்லாமும்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான மோதல்கள் முற்றாகமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு நிரந்தர அமைதியும் ஆக்கிரமிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்ற இருநாடுகள் மலரவேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தியிருந்தார் ஜனாதிபதி ரணில். 'சுதந்திர பலஸ்தீனம்' மலர்ந்தால் பலஸ் தீனத்துக்கு என தனி இராணுவம் தோற்றம் பெறும். பலஸ்தீன இராணுவத்துடன் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் கூட்டணிகளை (நேட்டோ போன்று) ஏற்படுத்திக்கொண்டால் அது இஸ்ரேலின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும். இன்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நேட்டோ வழங்கும் இராணுவ உதவிகள்போன்று, நாளை இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன இராணுவத்துக்கு வெளிப்படையான உதவிகள் வழங்கப்பட்டால், 'தான் அழிந்துபோவேன் அல்லது அமிழ்ந்துபோவேன்' என்பதுதான் சுதந்திர பலஸ்தீனத்தை இஸ்ரேல் தன் முழுப்பலத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்க்கக்காரணம்.
உலகின் உச்சபட்ச இராஜதந்திரமும், கருத்துத் தெரிவிக்க அசட்டுத்துணிவும் தேவையான இந்த விடயத்தில், இஸ்ரேல், அமெரிக்காவின் முகங்களை முறிக்காமல் அவற்றை நேருக்குநேராகச் சந்தித்து சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்திய வெகுசில தலைவர்களில் ரணிலும் ஒருவர். குறைந்தபட்சம் 'ஆயுதங்கள் தாங்கிய இராணுவத்தினர் அற்ற சுதந்திர பலஸ்தீனமாவது உருவாக்கப்படவேண்டும்' என்பது ரணிலின் திருத்தப்பட்ட கொள்கையாகவிருந்தது. அதுதான் இன்று உலகில் பல நாடுகளாலும் பொதுத் தீர்வுத்திட்டமாக' பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாகவும் இருக்கின்றது. ஓர் இராஜதந் திரியாக, முதிர்ச்சிமிக்க தலைவராக, அனுபவ ரேகைகளைத் தாங்கியவராக ரணிலை இந்த விடயத்தில் எத்தனை பாராட்டினாலும் அத்தனையும் தகும்.
ஆனால், இந்த விடயத்தில் ரணில் சொல்ல மறந்த அல்லது உணர மறுத்த கதையொன்றும் உள்ளது. யூத சித்தாந்தங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் இன்று பலஸ்தீனர்களை எவ்வளவுக்கெவ்வளவு வதைத் தெறிகின்றனவோ அதைவிட ஒருபடி மேலாகத்தான் பௌத்த சித்தாந்தத்தின் ஆக்கிரமிப்புகளால் ஈழத் தமிழர்கள் அனுபவித்த-அனுபவிக்கின்ற வேதனைகள் உள்ளன. அவை வார்த்தைகளால் அளந்தொழுத இயலாதவை - முடியாதவை. அங்கு பலஸ் தீனர்கள், இங்கு ஈழத்தமிழர்கள், அது மத்திய கிழக்கு, இது தெற்காசியா, அங்கு யூத ஆக்கிரமிப்பு, இங்கு பௌத்த ஆக்கிரமிப்பு. அவ்வளவும்தான் வேறுபாடு. மற்றும்படி வலி ஒன்றுதான், வதை ஒன்றுதான்.
தன் நாட்டில் உள்ள ஓர் இனக்குழுமம் நீதியைத் தேடி உழன்றுகொண்டிருக்கையில், அதற்கு ஒரு நிரந்தரத்தீர்வை வழங்காமல், எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நீதியைத் தேடத் தொடங்குவதெல்லாம் சுத்த அபத்தம். தமிழர்களுக்கு நீதியை வழங்கி விட்டு, தன்னையும் தன் நாட்டையும் சான்றாகக் காட்டி தன் விவாதப்புள்ளியை ரணில் எண்பித் திருப்பாராயின் மட்டுமே அது அவரது இதயத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகளாக இருந்திருக்கும்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.