நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக் கடிக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தீர்வுகளை முன்வைப்பது எந்தளவு அவசியமோ, இந்தப் பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க முயல்வதும் மிக முக்கியமானது.
பொருளாதார நெருக்கடியின் பின்னர் வாழ்க்கைச் செலவு உயர்வு, வரிகள் அதிகரிப்பு, வேலையில்லாப் பிரச்சினை என நாட்டின் சாதாரண மக்கள் முதல் பல தட்டு மக்களும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தச் சிக்கல்களால் அவர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதோடு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் நாட ஆரம்பித்திருக்கின்றனர். அதிகளவான மக்கள் குறுகிய காலத்தில் நாட்டைவிட்டு வெளியேற முற்படுவது நாட்டின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை நிச்சயம் எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்.
நாட்டின் சுகாதாரத்துறை, கல்வித்துறை உட்பட பல பிரதான துறைகளில் இந்தப் பிரச்சினை தற்போது தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. சுகாதார அமைச்சின் அண்மைய தரவின்படி, தமிழ்- சிங்களப் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் மட்டும் விசேட மருத்துவர்கள் ஏழுபேர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அண்மைய மாதங்களில் 350க்கும் அதிகமான மருத்துவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறி யுள்ளனர். இதனால் பல அரச மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. நாட்டின் ஏனைய துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையால் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றின் தாக்கங்களும் எதிர்காலத்தில் மெல்ல மெல்ல பகிரங்கமாகும். நாட்டில் இருந்து கல்வியியலாளர்களும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவது மிகச்சவாலான விடயமாகவே இருக்கும்.
ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் இவ்வாறான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது செயற்படுமாயின்- எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி களுக்கு அப்பால் நாடு பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதே திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம். நாட்டில் இருந்து தப்பிச்செல்லும் போக்கு குறைக்கப்படாவிட்டால் ஏனையவற்றுக்கு இலங்கை பிறநாடுகளிடம் கையேந்துவதைப்போன்று துறைசார் மூளைசாலிகளுக்கும் இலங்கை பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.