வடமாகாண மக்களின் வருமான மூலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆதலால், வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரங்களையும் முதலீட்டு வலயங்களையும் உருவாக்குவதிலும் அரசாங்கம் கூடுதல் ஈடுபாட்டுடன் செயற்படுகின்றது என்று தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. வலி வடக்கில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றியுள்ளார். மூன்று தசாப்தத்துக்கும் மேற்பட்ட ஆயுத மோதல்களைச் சந்தித்த போர்தின்ற பூமியான வடமாகாணத்தில், மக்களின் பொருளாதார வலுப்படுத்தலுக்காக சிறப்புச் செயற்றிட்டங்கள் தேவை என்பதைக் கிஞ்சித்தும் மறுப்ப தற்கில்லை. ஆனால், புதிய வருமான மூலங்களை உண்டாக்குவதற்கும், முதலீட்டு வலயங்கள் உருவாக்குவதற்கும் முன்னர் வடக்கில் இயல்பாக உள்ள வருமான ஈட்டுகையையும் வருமான மூலங்களையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்றதா? என்ற கேள்விக்கான பதிலை ரணிலும் அவர் தலைமையிலான அரசாங்கத்தினரும் வழங்கியே ஆகவேண்டும்.
தெற்காசியாவில் மிகப்பிரபலமான மீன்பிடிக்கேந்திரங்களில் ஒன்றாக வடக்கு மாகாணத்தின் கடற்பரப்புகள் அமைந்துள்ளன. ஆனால், இந்தக் கடற் பரப்புகளில் இந்திய மீனவர்களால் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல. பல இலட்சம் ரூபா பெறுமதியான வடமாகாண மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களின் இழுவைமடிகளால் அறுத்தெறியப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான பெறுமதியுடைய மீன்கள் அள்ளிச் செல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையிலிருந்து தமதுகடலையும் தொழிலுபகரணங்களையும் காப்பாற்றுமாறு நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வடமாகாண மீனவர்கள் மன்றாட்டமாகவும் போராட்டங்கள் மூலமாகவும் வலியுறுத்திய போதிலும் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுக்கப் எட்டதாகத் தெரியவில்லை. கைது ஒத்திவைக்கப்பட்ட சிறை விடுவிப்பு இவைதான் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கைக்கொள்ளும் ஆகப் பெரும் நடவடிக்கையாக இதுவரை அமைந்திருக்கின்ற தேயன்றி, வடக்கு மாகாண மீனவர்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்று கேட்டால், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பதில் பல்லிளிக்கும்.
இப்போதும்கூட இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி நான்கு மீனவர்கள் நான்கு நாள்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், நூற்றுக்கணக்கான மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தையும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத் தையும் முற்றுகையிட்டிருந்தனர். இவற்றுக்கெல்லாம் எந்தப் பதிலையும் வழங்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருந்துவிட்டு, வடக்கு மாகாண மக்களின் பொருளாதார ஈட்டுகைக்கான புதிய வருமான மூலங்கள் தொடர்பில் கருத்துப்பகிர்வதெல்லாம் அபத்தத்திலும் அபத்தமே. வடக்குமாகாண மக்களின் பிரதான பொருளாதார வருமான மூலங்களாக மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பனவே அமைந்திருக்கின்றன. இந்த மூன்றையும் மையப்படுத்திய பொருளாதாரம் எந்த நாட்டில் வலுப்பெறுகின்றதோ அந்தநாடு தற்சார்புப் பொருளாதாரத்திலும் பலமாக இருக்கும். ஆதலால்தான் மத்திய கிழக்கு நாடுகள்கூட விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பவற்றை மையப்படுத்திய பொருளாதார ஈட்டுகைக்கு தற்போது தயாராகி வருகின்றன ஆதலால், புதிய பொருளாதார மூலங்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு முன்னர், இருக்கும் பொருளாதார மூலங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை ரணில் அரசாங்கம் முதலில் மேற்கொள்ள வேண்டும். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன' கதையெல்லாம் வடக்கு மக்களின் வாழ்வியலில் வேண்டாம்.
(24. 03.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.