கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திய பட்டிமன்றத்தில், இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டினாரா? என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக் கின்றன. ஈழத்தமிழ்ச் சமுதாயத்தில் தற்போது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா? என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தை மையமாக வைத்தே கல்வி அமைச்சின் விசாரணை வளையத்துக்குள் அவர் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
கலாசாலை அதிபரும் சொற்பொழிவாளருமான லலீசன் மீதான விசாரணையை வெறுமனே ஓர் ஒழுக்காற்று நடவடிக்கையாகவோ அல்லது கல்வித்துறையின் நியாய - ஆதிக்க எல்லைக்குட்பட்ட விடயமாகவோ கொள்ளமுடியாது. சிங்களப் பேரினவாத சித்தாந்தத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையின் - உரிமை மறுப்பின் தொடர்கதையாகவே இந்த விசாரணை நகர்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் இளைஞர்களின் எழுச்சியை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல் எவ்வாறு நாட்டின் இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும்? என்ற கேள்வியும் இங்கெழுவது தவிர்க்கப்பட முடியாததாகின்றது. அத்துடன், ஈழத்தமிழ் இளைஞர்கள் எந்தவொரு எழுச்சியையும் பெற்று விடக்கூடாது, அவர்களின் சிந்தனைகள் இனத்தின் பாலான அபிலாஷைகளின் பாற்பட்டதாக அமைந்து விடக்கூடாது என்று சிங்களப் பேரினவாத அரசாங்கம் கொண்டிருக்கும் எழுதப்படாத கொள்கையையும் அதுசார் நிகழ்ச்சி நிரலையுமே அதிபர் லலீசன் மீதான நடவடிக்கைகள் காலக்கண்ணாடியாக உணர்த்தி நிற்கின்றன.
ஈழத் தமிழ்ச் சமூகத்துக்குள்ளும், இளைஞர்கள் மத்தியிலும் போதைப்பாவனைகளும் இன்னும் விதவிதமான பிறழ் கலாசாரங்களும் ஆழமாகத் திணிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றில் இருந்து விடுபடுவதற்கு இனத்தின் பாலான சிந்தனையையும் நன்நெறி நடத்தைகளையும் பலரும் ஊக்குவித்தே வருகின்றனர், அவர்களில் லலீசனும் ஒருவர். ஐஸ், கஞ்சா, ஹெரோய்ன், ஹொக் கெய்ன், பாலியல் துர்நடத்தைகள், கலாசாரப் பிறழ்நெறிகள் என இளைஞர்கள் மேய்ப்பனில்லா ஆடுகள் போன்று அங்கலாய்த்துத் திரியும் இக்காலத்தில், இளைஞர்களை வழிப்படுத்தும் வகையிலான பட்டிமன்றத்தையோ அல்லது சிந்தனையூட்டத்தையோ மேற் கொண்டமைக்காக அதிபர் லலீசனை எத்தனை பாராட்டினாலும் அத்தனையும் தகும். லலீசன் மட்டு மல்ல இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அணுவிஞ்ஞானியுமான அப்துல்கலாம், 'பிரபஞ்சத்தின் மகன்' என்றறியப்பட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், அலிபாபாவின் நிறுவுநர் ஜேக் மா, உலகப்பணக்காரர்களான பில்கேட்ஸ், ஜெப் பெஸோஸ் என அனைவருமே இளைஞர் சமூகத்தின் எழுச்சியைக் கருத்திற்கொண்டே செயற்பட்டனர் - செயற்படுகின்றனர். இவ்வாறிருக்கையில், லலீசன் மீதான விசாரணையானது ஈழத்தின் இளைஞர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாதம் கொண்டிருக்கும் ஆழமான ஆசையையே பறைசாற்றுகின்றது.
தமிழர்களை வெட்டுவேன், கொத்துவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் மேர்வின் சில்வாவையும் எத்தனையோ பௌத்த தேரர்களையும் கொஞ்சமேனும் அடக்கி வைக்காத அரசாங்கம், 'கல்விச் சமூகத்தைச் சேர்ந்த அதிபர் லலீசன் வெளிப்படுத்திய ஆரோக்கியமான கருத்துகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது அபத்தத்திலும் அபத்தம்...!
(18.03.2024 - உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
wmyjb3
jezgqa
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.