தந்தை செல்வா தேர்தலைபற்றிச் சிந்திப்பவரல்ல
தந்தை செல்வா தேர்தலைபற்றிச் சிந்திப்பவரல்ல

தந்தை செல்வநாயகம் அடுத்த தேர்தலை பற்றிச் சிந்திக்கும் தலைவர் அல்ல. அவர் அடுத்த தலைமுறையைப்பற்றித்தான் சிந்தித்தார். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் குகதாசன் தெரிவித்தார். தந்தை செல்வநாயகத்தின் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சிக் கூட்டம் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையால் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆரம்ப உரையாற்றிய குகதாசன் மேலும் தெரிவித்ததாவது, தந்தை செல்வா என இலங்கைத் தமிழரால் அன்போடு அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் நாள் மலேசியா நாட்டிலுள்ள ஈபோ நகரில் பிறந்தார். இவருக்கு நான்கு வயதாக இருக்கும் பொழுது இவருடைய குடும்பம் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தது. இலங்கைக்கு வந்த குடும்பம், யாழ்பாண மாவட்டத்திலே உள்ள தெல்லிப்பழை என்னும் ஊரில் குடியமர்ந்து, வாழ்ந்து வந்தது. அவர் வாழ்ந்த வீட்டை தெல்லிப்பழையில் இப்பொழுதும் நாம் காணலாம். தந்தை செல்வா தனது தொடக்கக் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியிலும், பட்டப்படிப்பை இலண்டன் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். அவர் தனது 19ஆவது அகவையிலே அறிவியல் இளமானிப்பட்டத்தை அதாவது பி.எஸ்.சி. பட்டத்தைப் பெற்றார் இளமானிப்பட்டம் பெற்ற பின்பு தந்தை செல்வா கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தந்தை செல்வாவின் தம்பி உடல்நல முற்றிருந்தார். அவரைப் போய் பார்ப்பதற்குப் பாடசாலை முதல்வரிடம் தந்தை செல்வா விடுமுறை கேட்டார். அதற்குப் பாடசாலை முதல்வர் விடுமுறை வழங்க மறுத்தார். இதன் விளைவாகத் தந்தை செல்வா தனது ஆசிரியர் பணியை துறந்தார். அதன்பின்பு கொழும்பு வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தார். ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய அக்காலத்தில், கிறித்தவப் பாடசாலை ஒன்றில் பணிபுரிந்த ஆசிரியர் செல்வநாயகம் அவர்கள் அவ்வப்பொழுது தமிழ் தேசிய உடை அணிந்து அதாவது வேட்டி சட்டை அணிந்து பாடசாலைக்குச் சென்றார். பாடசாலை அதிபர் இதை விரும்பவில்லை. அதனால் இந்தப் பள்ளி ஆசிரியர் பணியையும் அவர் துறந்தார். இதுமட்டுமன்றித் தந்தை செல்வா தனது திருமண நாளில் தமிழ் தேசிய உடை அணிந்து வந்தமையானது மணமகள் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆசிரியப் பணியைத் துறந்த தந்தை செல்வா இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1923ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார். அதன் பின்பு நீண்ட காலம் புகழ் பெற்ற குடிசார் (சிவில்) வழக்கறிஞராக விளங்கினார். பின்னர் இவருக்கு (கியூசி) பட்டமும் கிடைத்தது. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுடைய தலைமையில் இயங்கிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அமைக்கப்பட்ட முதலாவது அமைச்சரவையில் சேர்ந்து அமைச்சர் பதவி பெற வேண்டுமென ஜி.ஜி.பொன்னம்பலம் விரும்பினார். தந்தை செல்வா தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரையில் அமைச்சர் பதவியை எடுக்கக் கூடாதென்ற கொள்கையைக் கொண்டிருந்தார். அரசாங்கம் கொண்டுவந்த மலையக தமிழ் மக்களுடைய குடியுரிமையை பறிக்கும் இந்திய இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்தார். தந்தை செல்வா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்விரு விடயங்களிலும் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாகத் தந்தை செல்வா தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இவரோடு சேர்ந்து மருத்துவர் நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோரும் விலகினர். தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தந்தை செல்வா 1948ஆம் ஆண்டு டிசெம்பர் 18ஆம் நாள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். (வன்னியசிங்கம், நாகநாதன்). இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்குத் தீர்வாகக் கூட்டாட்சி முறையை வலியுறுத்தி வருகின்றது. இந்தக் கட்சியிலே நாம் எல்லாரும் இருக்கின்றோம் என்பதை நான் உங்களுக்குக் கூற வேண்டியதில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைத் தொடங்கியபின் தந்தை செல்வா போட்டியிட்ட முதலாவது தேர்தலில் தோல்வி கண்டார். எனினும் அதற்குப் பின்னர் அவர் போட்டியிட்ட ஆறு தேர்தல்களிலும் 85 வீதம் சைவர்கள் வாழ்கின்ற காங்கேயன் துறைத் தொகுதியில் கிறித்தவரான தந்தை செல்வநாயகம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வந்தார். இது தமிழ் மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கைக் காட்டி நிற்கின்றது. தந்தை செல்வா அரசியலில் இருந்த காலத்தில் அவரது கொள்கைகளை ஏற்பவர்கள் மட்டுமன்றி மறுப்பவர்களும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார்கள். அவரது கொள்கையை எதிர்த்த சிங்கள கட்சிகளும், சிங்கள மக்களும் அவர் அரசியலில் இருப்பதையே விரும்பினர். தந்தை செல்வா அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்க வில்லை. அடுத்த தலைமுறைப் பற்றியே சிந்தித்தார். அவர் அதிகமாக பேசுபவரும் அல்ல, எழுதுபவரும் அல்ல, நல்ல ஆழமாக சிந்தித்துச் செயற்படுபவர். இவர் அரசியலுக்கு வராமல் இருந்தால் இலங்கைத் தமிழர் உரிமைக் கோரிக்கை மட்டுமன்றி தமிழர் என்ற அடையாளமும் அழிந்து போயிருக்கும் என்று கூறினால் அது மிகையல்ல. தந்தை செல்வா தனிப்பட்ட வாழ்கையில் மிக எளிமையான வாழ்கையே வாழ்ந்தார். தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்திலும் சரி, கொழும்பில் அவர் வாழ்ந்த வாடகை வீட்டிலும் சரி அவரை யாரும் சென்று சந்தித்து தமது சிக்கல்களை கூறி தீர்வு காணக் கூடியவாறு இருந்தது. இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் பலர் குறைந்த வசதியோடு அரசியலுக்கு வந்து, நிறைந்த வசதியோடு வாழ்ந்ததே வரலாறு. ஆனால் தந்தை செல்வா மறுதலையாக நிறைந்த வசதியோடு அரசியலுக்கு வந்து குறைந்த வசதியோடு இறந்து போனார் என்பதுதான் உண்மையாகும் தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு, நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பேண வேண்டுமாயின் தமிழருக்கு தனித்த ஒரு தன்ஆட்சி அலகு தேவையென 25 ஆண்டுகளாக கூட்டாட்சிக்காக குரல்கொடுத்தார். பல அற வழிப் போராட்டங்களை மேற்கொண்டார். சில உடன்படிக்கைகளைச் செய்தார். தந்தை செல்வா அவர்கள் இலங்கை முதலமைச்சர் எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்காவோடும், இலங்கையின் மற்றொரு முதலமைச்சர் டட்லி.சேனநாயக்காவோடும் உடன்படிக்கைகள் செய்தார். அந்த உடன்படிக்கைகள் மதிக்கப்படாத சூழலில், அவை கிழித்தெறியப்பட்ட பட்டறிவின் விளைவாக தனி நாடே இலங்கைத் தமிழர் இனச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் என்ற முடிவுக்கு தந்தை செல்வா வந்தார். இதன் பெறுபேறாக 1976ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை மீட்புக்காக அயராது நேர்மையாக உழைத்த தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் இவ்வுலக வாழ்கையை நீத்தார். அதை நினைவு கொள்ளும் முகமாகவே இங்கு நாங்கள் குழுங்கியிருக்கின்றோம் என்பதை கூறிக்கொண்டு எனது தொடக்கவுரையை நிறைவு செய்கின்றேன், என்றார்.

#eelamnews #newsupdate #Uthayanpaper #sudaroli #sanjeevi #uthayannews #jaffnauthayan

137 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.