திருமலையில் சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு!
(ஆதவன்)
விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் - ஈச்சிலம்பற்று பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீ தரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, வெருகல் சீனன்வெளியில் நேற்று நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவு கூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மக்கள் முன் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலைதான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப் பேரவலம். அந்த அவலத்தின் விளிம்பில் எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கான உந்துதலை, இறந்த எம் உறவுகளின் ஆத்மாக்களே தருகின்றன - என்றார்.
கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன் உட்படப் பலர் பங்கேற்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.