எலக்சன் வரும் பின்னே, அரிசி வரும் முன்னே எண்டமாதிரி, ரணிலார் அரிசியைக் குடுத்து சனத்துக்கு ஐஸ்பண்ணவெளிக்கிட்டவர். வாக்குக்குக்காக இறைச்ச அரிசி இஞ்சாலிப் பக்கமும் சுவறி இருக்கு. வடக்கில தனக்கு வாக்கு விழாது எண்டு தெரிஞ்சாலும், எதுக்கும் தூண்டிலைப்போட்டு வைப்பம் எண்டு ரணில் குடுத்த அரிசியை வைச்சு சனங்களின்ர வீட்டில உலை எரிஞ்சுதோ இல்லையோ, சில மில் முதலாளிமார் நல்லா பேய்க்காட்டிப் போட்டினம் எண்டு பரவலாக் கதை.10 கிலோ உரப்பையிலதான் இந்த அரிசியன் குடுபட்டது. ஒவ்வொரு பிரதேச செயலகமும், கச்சேரிக் காரரும் பெருந்தொகையா. அரசாங்கம் சொன்ன ரேட்டில தரக்கூடியவையிட்டதான் இந்த அரிசியை வாங்கினவை,"எப்பவடா இப்பிடியொரு சந்தர்ப்பம் வரும்?" எண்டு காத்திருந்த மாதிரி மில்காரரும் இந்த அரிசி விநியோகத்தை வைச்சு, தங்களிட்ட இருந்த செல்லும் செல்லா இருப்பையெல்லாம் சனத்தின்ர தலையில் கட்டிப்போட்டினமாம். வழக்கமான அரிசியை விடவும், இந்தமுறை ரணில் குடுத்த குத்தரிசி கடுஞ் சிவப்பு நிறமாம். "உந்தச் சிவப்பு அரிசியை என்னெண்டு சமைக்கிறது? மில்லில கொண்டுபோய் தீட்டினால் கலர் மாறும்" எண்டு மில்லுக்குப் போனால். "உதெல்லாம் தீட்ட ஏலாது. அப்பிடித் தீட்டினால் குறுணியாத்தான் வரும் எண்டு" சொல்லியிருக்கினம். அதால சனம் அந்த ரத்தம் மாதிரிச் சிவத்த அரிசியை வேற வழியில்லாமல் சமைச்சிருக்கினம். வாயிலயே வைக்க முடியாதளவுக்கு சோத்தின்ர ரேஸ்ட் இருந்திருக்கு. அதால கனசனம் அரிசியை வாங்கிறதா, விடுறதா எண்டெல்லாம்கூட யோசிச்சிருக்கினம்.
எப்பவும் தவிச்ச முயல் அடிச்சுப் பழகின எங்கட சில விதானைமார், கூடாத அரிசிக்குப் பதிலா நல்ல அரிசியை மாத்திக் குடுக்க நடவடிக்கை எடுக்காமல், வேற இரு வேலை செய்திருக்கினம். அரிசி குடுபடேக்கையே "அரசாங்க அரிசி எப்பிடி இருக்குமெண்டு தெரியும் தானே? சமைக்கச் சரிவராது. விக்க விரும்பினவை அங்கால நிக்கிறவரிட்ட விக்கலாம்" எண்டு விளம்பரம் செய்திருக்கினம். அரிசி குடுக்கிற இடத்தில இருந்து கொஞ்சம் தள்ளி. சின்ன வாகனத்தோட ரண்டு மூண்டுபேர் நிண்டு, அரிசியைக் கொண்டு போறவையிட்ட "விக்கிற தெண்டால் தாங்கோ" எண்டு கேட்டும் வாங்கி யிருக்கினம். அப்பிடி வாகனத்தோட நிண்டவை விதானை மாரின்ர ஆக்கள் தானாம். சனத்திட்ட கொஞ்சக்காசுக்கு வாங்கி அப்பிடியே கடையளுக்கு கொமிஷனோட குடுக்கினமாம். முந்திச் சண்டை நடக்கேக்கையும் நிவா ரணச்சாமானை இப்பிடி சனத்திட்ட வாங்கி, விக்கிறதும், இல்லாத ஆக்களுக்கெல்லாம் நிவாரணமுத்திரை,குடும்பக் கார்ட் எல்லாம் குடுத்து கோடீஸ்வரரான விதானைமார் வாழ்ந்த மண் இது. ஆனால் இப்பத்தை விதானைமாருக்கு அப்பிடியான சந்தர்ப்பங்கள் இல்லை. இப்ப ஏதோ அரிசியிலதான் கொஞ்சம் லாபம் பார்த்திருக் கினம்போல. ஆனாலும் எல்லா விதானைமாரும் அப்பிடியில்லை.
அதைவிட முக்கியம், விதானைமார் நேர்மையா காசுகுடுத்துத்தான் இப்பிடிச் சனத்திட்ட அரிசி வாங்கி. சைட் பிஸ்னஸ் செய்தவை. ஆனால் சமைக்கவே முடியாத அரிசியை மில்காரரிட்ட தெரிஞ்சே வாங்கின 'பெருங்கையள்", சனங்கள் முறைப்பாடு செய்தாலும் 'முறைப்பாடே வரேலை' எண்டு விசயத்தை அமத்தப் பாக்கினமாம். ஏனெண்டால், கைநீட்டி 'சுளையா' வாங்கிக் கொண்டுதான் இப்பிடி உதவாத அரிசியைக் குடுக்க ஓகே சொன்னவையாம். ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே எண்ட கணக்கில அரசாங்கம் குடுக்கிற அரிசி தானே எண்டு இப்பிடி சில பெருச்சாளியள் விளையாட்டுக் காட்டியிருக்கினம். ஆனால் எல்லாம் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரத்தானே வேணும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.