(எழிலன்)
தண்டனைச் சட்டக் கோவையின் 19வது அத்தியாயத்துக்கு கொண்டுவரவுள்ள திருத்தங்களை
உடனடியாக இடைநிறுத்தவும் - நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி அமைச்சரிடம்
கோரிக்கை!
தண்டனைச் சட்டக் கோவையின் 19வது அத்தியாயத்தை திருத்துவதற்கு 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை உடனடியாக இடை நிறுத்துமாறு இலங்கை
நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை
விடுத்துள்ளது.
1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16
வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது
கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு
முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை
குறைக்கப்படவுள்ளது.
அதனால், நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில்
தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது
கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற
உறுப்பினர் (மருத்துவ கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்து புல்லே, 364 ஆம் பிரிவுக்கான உத்தேச
திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம்
முன்வைப்பதாக அறிவித்துள்ளார்.
அதனால், தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச
சட்டமூலத்தை மீளப்பெறுமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில்
கேட்டுக்கொள்வதாக சுதர்ஷினி பர்னாந்து புல்லே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும்
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் நாடாளுமன்ற பெண்
உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வதுடன் இது
தொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக கடிதம் மூலம் சுதர்ஷினி
பர்னாந்துபுல்லே மேலும் தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.