(மாதவன்)
யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப்படவில்லை இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது அரசதலைவர் தேர்தல் மட்டும் தான் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை. கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை ஆனால் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஐனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும் ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும்.
தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரோபாயமாக ஐனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம் பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம்.
எனவே இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் அரசதலைவர் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றினைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.